பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

190


உணவு செய்யப்பட்டது. புது முறைகள் புகத் தொடங்கியதும், ஒவ்வொன்றும்—சோறு, இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, பொங்கல், புலவு என்பன போல—ஒவ்வொரு பெயர் பெற்றது. பழைய கறுப்பன் பழைய கறுப்பனே என்றபடி, இடித்துத் துழவிய நீருணவுமட்டும் இன்றும் கூழ் என்னும் பெயரளவில் நிற்கிறது. ஆயின், புலவர்கள் மட்டும் பழைய மரபைவிடாது உணவு என்னும் பொருளில் கூழ் என்னும் சொல்லே ஆண்டு வருகின்றனர். இதுதான் கூழின் வரலாறு.

இந்த நூற்பாவில் கூழ் என்னும் சொல்லுக்குப் பொன் என்னும் பொருளும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பொன் கொடுத்தால் உணவுப் பொருள் கிடைக்கும்; அதனால் பொன்னும் கூழ் எனப்பட்டது போலும் இதிலிருந்து, பழங்காலத்தில் தமிழ்நாட்டில் பொன் நாணயம் புழக்கத்தில் இருந்தது என்பதும் தெரியவரும். பெரும்பாலான மக்கள் நாள்தோறும் பொன் கொடுத்து வாங்கும் பொருள் உணவுட் பொருள்மட்டுமேயாகும். ஆடை அணிகலன் முதலியன என்றோ ஒரு நாளைக்கே வாங்கப்படும். இன்றும் இந்நிலையைக் காணலாம். எனவே பொன்னின் பயனாக, உணவுப் பொருள் வாங்கும் நோக்கமே முனைப்புற்றிருந்ததால் பொன்னும் கூழ் எனப்பட்டது. “இந்தப் (சம்பளப்) பணத்தைக் கொண்டு தான் நாங்கள் இத்தனை பேரும் சாப்பிட வேண்டும்” என்று உலக வழக்கில் பணத்துக்கும் உணவுக்கும் தொடர்பு காட்டப்படுவதையும் ஈண்டு ஒப்பு நோக்குக (இது போன்ற சொற் குடும்பங்களைப் பற்றி இந்நூலின் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.)