பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

191



புலவர் என்னும் சொல்லால் அறு வகையினர் குறிக்கப்பட்டுள்ளனர்:

“அமரரும், கவிஞரும், ஆடுநரும், பாடுநரும்,
பொருநரும், அறிஞரும், புலவர் எனப்படுமே.”

என்பது நூற்பா. அமரர்=தேவர்; பொருநர்=போர் மறவர். ஒவ்வொரு கலையிலும் வல்லவர் புலவர் என அழைக்கப்படுவர் என்பது இப்பாடலால் புலனாகும். தேவருக்கும் இப்பெயர் உண்டு என்பதிலிருந்து இப் பெயரின் பெருமை விளங்கும்.

வாகை என்றால் வெற்றி. ஒரு துறையில் வெற்றி பெற்றவர் வாகை என்னும் ஒரு வகைப் பூ சூடிக்கொள்ளுதல் மரபு. நாளடைவில், வெற்றி பெற்றவர் வாகைப் பூ சூடினும் சூடாவிடினும் அவர் வாகை சூடினர்’ என்று சொல்லும் மரபு ஏற்பட்டுவிட்டது. வெற்றி என்றால் போரில் பெறும் வெற்றிமட்டும் சிலருக்கு நினைவுக்கு வரும். இன்னும் சிறிது ‘தாராளக் கணக்கு’ போட்டுப் பார்த்தால், போட்டிகளில் பெறும் வெற்றியும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். இவை மட்டும் வெற்றியாகா. உழைப்பு, கல்வி, பண்பு, கொடை, ஒழுக்கம், தவம், அறச்செயல்கள் முதலிய நல்லனவற்றிலெல்லாம் மற்றையோரினும் முதன்மை பெற்றுத் திகழ்வதும் வாகையாகும். இந்த அரும்பெருங் கருத்தைத் திவாகரம் அழகாக அறிவித்துள்ளது:

“ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும்
கைவலம் முதலாம் கல்வியும் ஆண்மையும்
சால்பு முதலாம் பண்பும் ஈகையும்
ஒழுக்க முதலாம் தவமும் அறத்துறையும்
ஒருவரின் ஒருவர் வென்றியும் மிகுதியும்
வருவன எல்லாம் வாகை என்னும் பெயர்.”