பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

196



பொருந்துமா? அதாவது, நான்கு நிலையினருள் கிருகத்தன் எனப்படும் இல்வாழ்வான், மற்ற மூவர்க்கும் (மூன்றுநிலையினர்க்கும்) துணையாக நிற்க வேண்டும் என இக் குறளுக்குப் பொருள் கூறப்படுகிறது; இது பொருந்துமா?

வள்ளுவர் தமது நூலில் அறத்துப்பாலை நான்காகப் பிரிக்காமல் இல்லறம், துறவறம் என இரண்டாகத் தானே பிரித்துக்கொண்டுள்ளார். அப்படியிருக்க, நான்கு நிலைகளை எவ்வாறு இக்குறளில் அவர் அமைத்துப் பேசியிருக்க முடியும்? மேலும் இக்குறளுக்கு அடுத்துள்ள

“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.”

என்னும் குறளில் ‘துறந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளாரே—அவர் யார்? முன் குறளிலேயே துறவிகள் அடங்கிவிட்டால், இந்தக் குறளிலும் அவர்களுக்கு என்ன வேலை? எனவே, முன் குறளில் உள்ள ‘இயல்புடைய மூவர்’ என்பதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்க வேண்டும். இதனை ஆராய்ச்சியாளரின் அறிவுப் பசிக்கு விருந்தாக விட்டு வைப்போம்.

பிற்காலத் தமிழ் நூற்கள் சிலவற்றில் நான்கு நிலைகள் பேசப்பட்டுள்ளனவே எனின், அது, வடமொழிக் கோட்பாடு தமிழில் இரண்டறக் கலந்துவிட்ட காலத்தின் கோலமாகும். நிகண்டு நூற்களிலுங்கூட, வடமொழிக் கோட்பாடுகள் நிரம்ப இடம் பெற்றுள்ளன.