பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

203



மேற்கூறிய பதினெட்டு மொழிகளுள் சோனகம், சிங்களம், சாவகம், சீனம் என்னும் நான்கைத் தவிர, மற்ற பதினான்கும் இந்தியப் பெருநாட்டைச் சேர்ந்த மொழிகளாம். இலக்கண உரைநூற்களில் காணப்படுகின்ற

“சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்,
கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங் குசலம்,
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.”

என்னும் பழம் பாடல் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. தமிழ் நாட்டை அடுத்தடுத்துத் தொடர்பு கொண்ட பதினேழு நாடுகள் இப்பாடலில் பேசப்பட்டுள்ளன. இப்பாடலையும் திவாகர நூற்பாவையும் உற்று நோக்கின், தமிழர்கள் பல நாட்டினரொடு—பல மொழியினரொடு தொடர்பு கொண்டிருந்தமை புலனாகும்.

பதினெட்டு மொழிகளுள் தமிழ் மொழியானது திரவிடம் என்னும் மாற்றுப் பெயரால் திவாகரத்தில் சுட்டப்பட்டுள்ளது. வட இந்திய மொழிகள் பலவற்றைத் தனித்தனியே எடுத்து மொழிந்த திவாகரம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் தென்னிந்திய மொழிகளைத் தனித் தனியே சுட்டவில்லை. திவாகரம் எழுதப் பெற்ற எட்டாம் நூற்றாண்டில் மலையாளம் என ஒரு மொழி இல்லை. மலையாள நாடு அப்போது சேர நாடு. இப்போதும் தமிழும் மலையாளமும் ஏறக்குறைய ஒரே மொழியே. பழங் கன்னடமும் தமிழும் ஒன்றேயாம். இப்படியே பார்த்துக் கொண்டு சென்றால், தென்னிந்தியாவில் தமிழ்மொழி அன்று பெற்றிருந்த தலைமைநிலை புலனாகும்.

13