பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நூன்முகம்

முதல் பெரிய தொகுப்பு

அகராதிக் கலை ஒரு தனித் துறையாக மேலை மொழிகளில் இதுபோழ்து மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழில் தொன்று தொட்டுப் பல்வகை அகராதி நூற்கள் தோன்றினும், எல்லாவற்றையும் பற்றிய விவரங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு தொகுப்பு நூல் இதுகாறும் தோன்றிலது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon), கலைக் களஞ்சியம், உயர்திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றில், ஒரு சில அகராதித் துறை நூற்களைப் பற்றிய விவரங்களைச் சுருங்கிய அளவில் ஒருசேரக் காணலாம். எனக்குத் தெரிந்தவரைக்கும், தமிழ் மொழி தோன்றிய நாள் தொட்டு இந்நாள்வரை தமிழில் எழுதப் பெற்றுக் கிடைத்துள்ள அகராதித் துறை நூற்கள் அனைத்தையும் பற்றிய விவரங்களை இயன்ற அளவு விரிவாகத் தரும் முதல் பெரிய ஆராய்ச்சித் தொகுப்பு நூல் தமிழ் அகராதிக் கலை என்னும் இந்த வெளியீடுதான் என்று கருதுகிறேன். இந்நூல் எழுந்த வரலாறுயானே எதிர்பாராதது:–

நூல் வரலாறு

புதுச்சேரி பிரெஞ்சு கலைக் கழகத்தின் (French Institute) தமிழ்த் துறைத் தலைவரும் புதுவைக் கல்விக்கழகத்தின் தலைவருமாகிய உயர்திரு. ரா. தேசிகப் பிள்ளை, பி.ஏ., பி.எல். அவர்கள் மூன்றாண்டுகட்குமுன் ஒரு நாள் என்னிடம் வந்து, கல்விக் கழகத்தில் ‘நிகண்டு நூற்கள்’ என்னும் பொருள் பற்றிச் சொற் பொழிவாற்ற வேண்டும் எனக் கோரினர்கள். பேசுவதாக இசைவு தந்தேன் நான். சொற்பொழிவிற்குப் போதுமான அளவு ஒரு திங்கள் பொழுது இருந்தது.