சுந்தர சண்முகனார் 125
பின்னர், வீடணனுக்கு முடிசூட்டுமாறு இராமன் இலக்குவனை ஏவ அவ்வாறே இலக்குவன் முடி சூட்டினான் வீடணன், அரக்கன் இராவணன் பின்னே தோன்றிய இழிதகைமை தீர்வதற்காக, பரதனுக்குச் சூட்டியது போலவே இராமனுடைய பாதுகையையே முடியாகச் சூட்டுமாறு செய்து கொண்டான்.
- "களவியல் அரக்கன் பின்னே
- தோன்றிய கடன்மை தீர
- இளையவற் களித்த மோலி
- என்னையும் கவித்தி என்றான்" (143)
திருநாவுக்கரசர் சமணரோடு சின்னாள் இருந்த பொல்லாங்கு தீர்வதற்காகச் சிவனது இலச்சினையைத் தருமாறு வேண்டிய செய்தி இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. இது பெரிய புராணம் - திருநாவுக்கரசர் பகுதியில் சொல்லப் பட்டுள்ளது.
- 'புன்னெறியாம் அமண் சமயத்
- தொடக்குண்டு போந்த உடல்
- தன்னுடனே உயிர் வாழத்
- தரியேன் நான் தரிப்பதற்கு
- என்னுடைய நாயக நின்
- இலச்சினை இட்டருள்" (150)
என்பது பாடல்.
தம்பி முறை
பின் இராமன் வீடணனை நோக்கி, நாங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வர்-பின் குகனோடு ஐவரானோம்; அதன் பின் சுக்கிரீவனோடு அறுவரானோம்; இப்போது நின்னைச் சேர்த்து எழுவரானோம். உன் தந்தையாகிய தயரதன் என்னைக் காட்டுக்கு அனுப்பியதால், பிள்ளைப் பேற்றுச் செல்வம் மிகுதியாய் உடையவனானான்.