சுந்தர சண்முகனார் 141
நீரிடை நெருப்பு
வருணன் வராததால், மிக்க நீரில் நெருப்பு தோன்றினாற் போல, அமைதியே வடிவான இராமனின் கண்கள் சினத்தால் சிவந்தனவாம்.
“ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத் தென்னச்
சீற்றம் மீக்கொண்டு சிவந்தன தாமரைச் செங்கண்”
நெருப்பை நீரால் அவிப்பர். ஆனால் நீரிலே நெருப்பு தோன்றியது வியப்பு. நெருப்பிலிருந்து நீர் தோன்றுவது உண்டு எனக் கூறுவது உண்டு. அதாவது விண்ணிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து மண்ணும் தோன்றியதாக ஐம்பெரும் பூதங்களின் தோற்றம் கூறப்படும். அந்த முறையின்படிப் பார்க்கினும் நீரிலிருந்து நெருப்பு தோன்றுவதில்லை - நெருப்பிலிருந்தே நீர் தோன்றுவதாகக் கொள்ளல் வேண்டும். நாம் வாழும் மண்ணுலக உருண்டை ஞாயிறாகிய நெருப்பு உருண்டையிலிருந்து வந்ததாகும். அதாவது நெருப்பு குளிர்ந்து நீராகவும் பின் மண்ணாகவும் ஆவது உண்டு. மாறாக, நீரிலிருந்து நெருப்பு தோன்றுவதாகக் கூறப்பட்ட உவமை இராமனது இயற்கையான அமைதியைக் குறிப்பிடுகின்றது. அத்தகையோனுக்குச் சினம் தோன்றியது வியப்பு என்பதைப் பாடல் அறிவிக்கிறது.
முதலிலேயே சீதையின் பிரிவுத் துயராலும் தூக்கம் இன்மையாலும் சிவந்த கண்கள் (செங்கண்) இப்போது மேலும் சிவந்தனவாம்.
மாண்ட
மனைவியை இழந்து தான் வருந்துவதாக இராமன் கூறுகிறான்: ‘மாண்ட இல் இழந்து அயரும் நான்’ என்பது பாடல் பகுதி. மாண்ட = மாட்சிமைப்பட்ட, இல்