268 தமிழ் அங்காடி
மாற்றாக அவனுக்கு ஒறுப்பு (தண்டனை) கொடுக்க வேண்டும் என்றார்.
என்ன ஒறுப்பு கொடுக்கலாம்? என்று கேட்டான்.
அவன் நாணும்படியான ஒறுப்பு தரவேண்டும் என்றார்.
அவன் நாணும்படியான ஒறுப்பு எது? என்று கேட்டான்.
அவனுக்கு நல்ல நயமான நன்மை செய்யவேண்டியது தான் அவனுக்கு ஏற்ற ஒறுப்பு என்றார்.
அப்படியா? என்றான்.
நீ நன்மை செய்வது போதாது. பிறகு, அவன் உனக்குச் செய்த துன்பத்தை அறவே மறந்து விடவும் வேண்டும் என்றார். இதுதான்,
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்’
என்னும் குறளின் விளக்கமாகும். இது மிகவும் புதிய - புரட்சிக் கருத்தல்லவா?
அறநெறியைச் சொல்வதாயினும், சொல்லும் முறையில் நயம் இருக்க வேண்டும். இப்படி இல்லாமல்,
"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்”
(மாமியாரை எந்நாளும் விரட்ட வேண்டாம்)
என்று சொல்லிக் கொண்டு போனால் சுவைக்குமா?
ஒருவன் நிரம்பப் பணம் சேர்த்தான். அவனுடைய நெருங்கிய உறவினரும் நண்பரும், பணத்தை ஈட்டியது பெரியதன்று - அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் - வலுவான இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவை-