பக்கம்:தமிழ் அங்காடி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  53


வாளா கழிந்தன

மேலும் அரக்கி மொழிகிறாள்: ஐயனே, நீ இங்கே இருப்பதறியேன். முனிவர்கட்குப் பணிவிடை செய்து கொண்டுள்ளேன். பழுதற்ற என் பெண்மையும் இளமையும் பயனிலாதுள்ளன. வாணாள் வீணாளாய்க் கழிகிறது - என்றாள்.

             “எழுதரு மேனியாய் ஈண்டு
                எய்தியது அறிந்திலாதேன்
             முழுதுணர் முனிவர் ஏவல்
                செய்தொழில் முறையின் முற்றிப்
             பழுதறு பெண்மை யோடும்
                இளமையும் பழுதின்றேகப்
             பொழுதொடு நாளும் வாளா
                கழிந்தன போலும் என்றாள்" (48)

இராமனது மேனி அழகை யாராலும் எழுத முடியாது என ஒவியர்கட்கு அறை கூவல் விட்டுள்ளாள். தான் முறையாகச் செயல்படும் இயல்பினள் என்பதை, செய் தொழில் முறையின் முற்றி என்பதனால் அறியச் செய்கிறாள். திருமணம் ஆகாமையால் தன் பெண்மையும் இளமையும் வீணாகின்றன என்கிறாள். ஒவ்வொரு நாள் பொழுதும் வீணாய்க் கழிகின்றதாம். காலம் G போன்றதாயிற்றே. வீணாய்க் கழியலாமா? ஈண்டு,

            “அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
            பெற்றாள் தமியள் மூத் தற்று" (1007)

என்னும் குறள் ஒப்பு நோக்கத் தக்கது. பின்னால், அயோமுகிப் படலத்தில், இலக்குவனிடம் அயோமுகி இவ்வாறு சொல்வதைக் காணலாம். ஆணாயினும் பெண்ணாயினும், காலத்தோடு திருமணம் செய்து கொள்வது நல்லது என்னும் பொது விதி ஈண்டு எண்ணத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/55&oldid=1202367" இலிருந்து மீள்விக்கப்பட்டது