சுந்தர சண்முகனார் 59
எடுத்துக் காட்டு கிடைக்காதவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
அப்போது சீதை அரக்கியின் கூற்றுக்கு அஞ்சி இராமனின் தோள்களைத் தழுவிக் கொண்டாள். மீண்டும் அரக்கி தன் பெருமை கூற முயன்றாள். இராமன் அவளை நோக்கி, நீ இவ்விடம் விட்டுப்போய் விடுக; வெளியில் சென்றிருக்கும் என் தம்பி இலக்குவன் வரின் நடப்பதே வேறு என்று கூறிச் சீதையுடன் தவக்குடிலுக்குள் சென்று விட்டான்.
அன்றிலால் நடுக்கம்
அரக்கி காம நோயின் எல்லைக்குச் சென்று விட்டாள். திங்கள், தென்றல் முதலியவை காமத்தை மிகுவிப்பதால் அவற்றை நொந்து வெறுக்கிறாள்.
சேவல் அன்றிலொடு பெடை அன்றில் நாவினால் ஒலி எழுப்பித் தொடர்பு கொள்வதைக் கேட்டுச் சோர்ந்து போனாள்:
"சேவலோடு உறை செந்தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள்" (76)
ஆண் அன்றில் சிறிது நேரம் பிரிந்திருந்தாலும், பெண் அதனைக் கூவிக் கூவி அழைத்துக் கொண்டேயிருக்குமாம். பிரிந்திருக்கும் காதலர்கள், என்றும் ஒன்றியிருக்கும் அன்றில் இணையின் இன்ப ஒலி கேட்டுப் பொறாமை கொள்வராம். இந்தச் செய்திகளை,
"நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமம்" (160)
"அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர் கொல் வாழி தோழி” (177)