பக்கம்:தமிழ் அங்காடி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68  தமிழ் அங்காடி


என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதியும், சிந்தாமணியில் உள்ள

                "உறங்கு மாயினும் மன்னவன் தன்ஒளி
                கறங்கு தெண்திரை வையகம் காக்கும்” (248)

என்னும் பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. உலகினர் கூறும் பழமொழியையும் முன்னோர் பாடல் களையும் அடியொற்றிக் கம்பர் இக்கருத்தை எழுதியுள்ளார்.

காற்று, புனல், கனல், கூற்று, விண், கோள்கள் முதலிய யாவற்றையும் ஏவல் கொள்ளும் தன் அண்ணன் உள்ள போதே, மானிடரால் இப்படி நேர்ந்ததே என வருந்தினாள்.

செருப்பு அடிப் பொடி

மேலும் இராவணனை விளித்து, உன் கால் செருப்பு அடியில் உள்ள தூசுக்கு ஒப்பாகாத மனிதர்களை அடக்க மாட்டாயா? நீயோ எட்டுத் திக்கு யானைகளை மருப்பு ஒடித்து அடக்கியவன். அந்த யானைகளோ காலால் மிதித்த மண் நெருப்பாகும்படி நடக்கக் கூடியவை, மற்றும், சிவனது கைலை மலையையே தூக்கிய தோளை உடையவனாயிற்றே நீ - இப்போது வாராயோ என்று புலம்பினாள்:

          "உருப் படிவ மன்மதனை ஒத்துளரே யாயினும் உன்
          செருப்படியிற் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ
          நெருப்படியில் பொடிசிதற நிறைந்தமதத் திசையானை
          மருப்பொடியப் பொருப்பு இடியத்தோள் நிமிர்த்த
                                                  வலியோனே" (105)

மருப்பு = தந்தம். பொருப்பு = சிவனது கைலை மலை. அந்த மானிடர்கள் அழகில் மன்மதனை ஒத்திருப்பினும், வலிமையில், உன் செருப்பு அடியில் உள்ள தூசுக்கு ஒப்பாகார் என்று அண்ணனை எண்ணி அரக்கி புலம்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/70&oldid=1202280" இலிருந்து மீள்விக்கப்பட்டது