சச்சரவுகளை வளர்த்தும் வருகின்றனர். சூதாடுதல் முதலிய தீய பழக்கங்களும் இவர்களிடம் இருக்கின்றன. இச் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகள் கெட்டுத் திரிவது இயற்கையாகிவிட்டது. “ தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் “ ஆதலால், இளமையில் உண்டாகும் இத்தீய பழக்க வழக்கங்கள் வயது ஏற ஏற முறுக்கேறுகின்றன.
பிள்ளை வளர்ப்பு ஒரு கலை
பிள்ளை வளர்ப்பு ஒரு கலையாகும். சமுதாய நலத் திட்டத்தில் இக்கலையைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அறிஞர்களே நியமிக்கவேண்டும். அவர்கள் ஊர் ஊராகச் சென்று பொதுமக்களுக்கு இக்கலை அறிவை ஊட்டவேண்டும். வாழ்க்கைக்குத் தேவை அற்ற பல செய்திகளைப் பொது மக்களிடம் பேசும் பேச்சாளர்கள், பிள்ளை வளர்ப்புக் கலையைப் பற்றி அறிந்து அதைப் பொதுமக்களுக்கு ஊட்டவேண்டும். நாட்டிலுள்ள நல்லவர்களும் சன்மார்க்க சங்கங்களும் அரசினரும் இத்துறையில் மிக்க ஊக்கம் காட்டவேண்டும். சமுதாயத்தில் உண்மையான பற்றுச்கொண்ட ஊழியர்கள் இத்துறையில் இறங்கி வேலை செய்யவேண்டும். இன்றுள்ள அவலநிலை உண்மையாக மாறவேண்டுமானால், இந்த முறையில் அனைவரும் பாடுபடவேண்டும். இங்ஙனம் உழைக்காமல் குற்றம் புரியும் சிறுவர்க்கு இரண்டொரு பள்ளிகள் மட்டும் வைத்துவிடுதல் போதாது; அவற்றுக்குப் பொதுமக்களோ அரசாங்கமோ மானியம் வழங்கிவிடுதல்மட்டும் போதாது.
முடிவுரை
இன்று சிறுவராக இருப்பவரே எதிர்காலச் சமுதாய மக்கள்; இந்நாட்டு மன்னர். ஆதலால் அவர்கள் நல்ல ஒழுக்கம் உடைய நன்மக்களாக இருந்தால்தான் எதிர்