9. இலக்கியம்- 1
இலக்கியத் தோற்றமும் வளர்ச்சியும்
மக்களின் உள் உணர்ச்சியிலிருந்து மொழி வடிவில் வெளிப்படுவது இலக்கியம். சமுதாயத்து எல்லா மக்களும் ஒரே நிலையில் கல்வி கற்றவர்களல்லர் ; ஒரே வகை வாழ்க்கை முறையையும் மேற்கொண்டவரல்லர்; ஒரேவகை அநுபவத்தையும் உடையவர் அல்லர்: ஒரே வகை நாகரிகமும் பண்பாடும் பெற்றவருமல்லர் ; குறிஞ்சி முதலிய நிலவகைகளே இந்த உண்மையை விளக்கும் சான்றுகளாகும். நாள்முழுதும் வயிற்றுக்கே உணவு தேடி அலையும் குறிஞ்சி நிலத்தாரிடமும், பாலை, நெய்தல், முல்லை நிலத்தாரிடமும் கல்வியையோ கலை வளர்ச்சியையோ மிகுதியாக எதிர் பார்த்தல் இயலாது. மருதநில மக்களிடையே இவற்றை மிகுதியாக எதிர் பார்க்கலாம். நீர்வளமும் நிலவளமும் உடைய அப்பகுதியில்தான் மக்கள் சிறிது பொழுதே உணவுப் பொருள்களை உண்டாக்கச் செலவிடுவர். எனவே, அவர்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. அந்த ஒய்வில் அவர்கள் கல்வியைப் பற்றியும் கலைவளர்ச்சியைப் பற்றியும் கருதுதல் இயற்கை
ஆயினும் எல்லா நிலங்களிலும் வாழ்கின்ற மக்கள் மனவுணர்ச்சியுடையவர்களே. இன்பதுன்பங்கள் எல்லோருக்கும் பொதுவானவை. விழாக்களும் விருந்துகளும் களியாட்டங்களும் எல்லா நிலங்களுக்கும் பொது வானவை. அவர்கள் தத்தம் அறிவு நிலைக்கேற்ப—