பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழ் இலக்கியக் கதைகள்

பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பவ்வியமாக நின்று கொண்டிருந்தான். வாரி முடிந்த குடுமியும், கைக் காப்புமாக விளங்கிய அந்தப் பையனின் அசாதாரணமான தேஜஸும் வனப்பும் காளமேகத்தை வியப்படைய வைத்தது. பையன் கையிலிருந்த பழம், பஞ்சாமிர்தம், தேங்காய் மூடிகள் இவைகளடங்கிய தட்டு, அவன் கோவிலுக்குள்ளிருந்து வருகிறான் என்பதைப் புலவருக்குக் கூறின. அவற்றைக் காணவும் அவர் உள் நாக்கில் நீர் சுரந்தது. பசி முன்னிலும் பெருகிவிட்டது போலத் தோன்றியது. இருந்தாலும் தம்மை அடக்கிக் கொண்டு பையனை முன்னே உட்காருமாறு சைகை செய்த பின், ‘என்ன தம்பீ? என்ன கேட்கவேண்டும்’ என்று வினாவினார். பையன் தட்டைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். புலவர் கண்கள் மீண்டும் தட்டை ஊடுருவி விட்டுத் திரும்பின.

“ஏன் ஐயா? இந்தத் தேவர்கள் எல்லாம் கண்ணிமைக்க மாட்டார்களாமே? அது ஏன் என்று எனக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?’ இப்படிக் கேட்டுக் கொண்டே வந்த பையன் திடீரென்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்து அதில் என்ன தெரிந்து கொண்டானோ? தெரியவில்லை!

“ஆமாம்! நீங்கள் சாப்பிட்டு வெகுநாள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே? பசிச் சோர்வு உங்கள் முகத்தில் நன்கு தெரிகிறதே! முதலில் இவற்றைச் சாப்பிடுங்கள்!” என்று தட்டை அவருக்கு முன் நகர்த்தினான்.அப்போது அந்த இளம் முகத்தின் வரி வரியான திருநீற்றுக் கோடுகளுக்கு நடுவே ஒளிர்ந்த அனுதாபம் புலவருக்கு நன்றாகத் தெரிந்தது. அதில் தெய்வீக வனப்பு இருந்ததை அவர் கண்டார்.

தட்டுத் தீர்ந்தது. அவருடைய வயிற்றுத் தட்டும் தீர்ந்தது. தட்டை நகர்த்திவிட்டுப் புலவர் வாய் நிறைய ஏப்பத்தோடு நிமிர்ந்தபோது தேக்கிலைத் தொன்னை நிறையத் தண்ணீருடன் நின்று கொண்டிருந்தான் பையன். தொன்னையை நன்றியறிவோடு கையில் வாங்கிக் கொண்ட அவர், அவன் குறு இதழ்களில் ஒடி மறைந்த தெய்வீகச் சிரிப்பொன்றைக் கண்டார். வயிறு