பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழ் இலக்கியக் கதைகள்

வேனிலுக்காக முதலியார் பந்தலின் கீழ்ப் பரப்பியிருந்த புதுமணல் தமக்கும் தம்மைப் போலக் கேட்க நாணுபவர்களுக்கும் எழுதுவதற்கு என்றே பரப்பப்பட்டதாகப் புலவர் பாடிய தற்குறிப்பேற்றத் திறமை நுணுக்கமானது. தம்மை அப்படி துணுக்கமாகப் புலவர் போற்றிய உட்பொருளை முதலியாரும் புரிந்து கொண்டு வியந்தார். அவர் மணலில் எழுதிக் கேட்ட உதவியை உடனே அளித்தும் உவந்தார்.

“அது என்ன உதவி?” என்பதைப் புலவரே வாய்திறந்து சொல்ல நாணமுற்று மணலில் எழுதியபோது நாம் அறிந்து கொள்வது அத்தனை அவசியமா என்ன?

47. திரை விலகியது

ந்தகக் கவி வீரராகவ முதலியார் ஊனக் கண்கள் உதவாமற் போன குருடர். ஆனால் அவருடைய ஞானக் கண்கள் எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருந்தன. ஊனக் கண்கள் இல்லாத குறையால் உலகில் அவருக்கு ஏற்படவேண்டிய துன்பங்கள் ஏற்படாமல் அவர்தம் ஞானக் கண்கள் அவரைப் பாதுகாத்து வந்தன. கண்ணில்லாமல் அவர் வருத்தங் கொண்டு நெஞ்சழிந்து போகாத வண்ணம் அவருடைய மாணவர்கள் எந்நேரமும் பக்கத்திலேயே இருந்து அவருக்கு வேண்டியவற்றை வெறுப்பின்றிச் செய்து வந்தனர். அவர் கற்றிருந்த தமிழும், பெற்றிருந்த அன்பர்களும், மாணாக்கர்களும் அவருடைய சொந்தக் கண்களாக விளங்கினர். ஒரு முழு மனிதராக வாழ்வதாக எண்ணிக் கொள்ளத்தக்க மன நிறைவை அவர் இதனால் பெற்றிருந்தார்.

ஒருகால் அவர் பெருமையைக் கேள்விப்பட்ட ஈழநாட்டு அரசன் அவரைக் கண்டு பழக வேண்டும் என்ற கலை ஆர்வத்தோடு ஈழத்துக்கு வந்து போக வேண்டும் என்று அவருக்கு அன்போடும் மரியாதையோடும் திருமுகம் அனுப்பி இருந்தான். வீரராகவ முதலியார் போக வேண்டும் என்று விரும்பினாலும்