பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தமிழ் இலக்கியக் கதைகள்

ஆம்! காடும் செடியும் தமிழ் மணக்கச் செய்து விட்டார்கள் அந்தப் பிள்ளைகள். படிக்காசரை இப்படி ஒரு பாட்டே பாடத் தூண்டி விட்டது அந்தத் தமிழ்மணம்.

52. சம்பந்தனுக்கு ஒரு சவுக்கடி

அந்தக் காலத்தில் திருவண்ணாமலையில் சம்பந்தன் என்று ஒரு செல்வச் சீமான் வாழ்ந்து வந்தார். அவரிடம் எவ்வளவு செல்வம் இருந்ததோ அதைவிட அதிகமாகச் செருக்கும் திமிரும் இருந்தன. பிறரையோ பிறருடைய அறிவையோ அவர் மதிப்பது கிடையாது. எதற்கெடுத்தாலும் யாரிடமும் எடுத்தெறிந்து பேசிவிடுகிற குணமுள்ளவர்.தெருவில் கீழே குனிந்து பார்க்காமல் நடக்கப் பழகி விட்டவர்கள் என்றாவது ஒரு நாள் தடுக்கி விழ நேரிடுவது போல இந்த மாதிரிக் குணமுள்ளவர்கள் தலை குனிந்து தோற்கின்ற நிலை எப்போது வருமென்று சொல்ல முடியாது. பிறருக்கு வளைந்து கொடுக்காமல், பணியாமல் வாழ வேண்டுமென்று நினைக்கின்றவர்கள் எல்லோரும் பிறர் மட்டும் தங்களுக்கு வளைந்து கொடுத்தும் பணிந்தும் வாழ வேண்டுமென்று எண்ணுகிறார்கள். திருவண்ணாமலைச் சம்பந்தன் இந்த வகையைச் சேர்ந்த மனிதராக இருந்தார். முள் மரம் போலப் பிறரை நெருங்க விடாமல், நெருங்கினால் குத்திப் பிறருக்குப் பயன்படாமல் வாழ்வதில் அவருக்கு என்னதான் இன்பம் கிடைத்ததோ?

அவருடைய காலத்தில்தான் இரட்டைப் புலவர்கள் தமிழ் நாட்டில் ஊரூராகப் பயணம் செய்து பாடிப் பயன்பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெயர் இளஞ்சூரியர். மற்றொருவர் பெயர் முதுசூரியர். ஒருவர் குருடர், இன்னொருவர் நொண்டி குருடர், நொண்டியைச் சுமந்து கொள்ளவேண்டும் என்றும், நொண்டி குருடருக்கு வழியிலுள்ள மேடு பள்ளங்களைச் சொல்லி வழிகாட்ட வேண்டுமென்றும், இரண்டு பேருமாகச் சேர்ந்து ஒரு ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த