பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

157

ஏற்பாடு இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்கு வசதியாக இருந்தது. இருவருமே கவி உள்ளம் படைத்தவர்கள். ஆகையால் கவலையை மறந்து வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக் கொண்டே அளவளாவி வாழ்வதற்குப் பழகியிருந்தார்கள். கண்களும் கால்களும் இல்லாத குருடரும் நொண்டியுமாக இருந்தாலும் மனத்தின் உற்சாகத்தில் நொண்டித்தனமோ, குருட்டுத்தனமோ பட்டு மூடி விடாமல் காத்துக் கொள்ளத் தெரிந்திருந்தது அவர்களுக்கு. கால்களும் கண்களும் இருந்தும் உள்ளத்தை நொண்டியாகவும், குருடாகவும் வைத்துக் கொண்டு உலகத்தில் உற்சாகமாக வாழ்வது எப்படி என்று தெரியாமல் வேதனைப் பட்டுக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்தார்கள் இரட்டையர்கள். இரட்டையர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள். மிகவும் வேடிக்கையானவை. விநோதம் நிறைந்தவை. உள்ளத்தில் பழுத்துக் கனிந்த கலை உணர்ச்சி இருந்தாலொழிய யாராலும் இப்படிக் கவலையின்றி வாழ முடியாது.

இரட்டையர்களுடைய பாடல்கள் பெரும்பாலும் இரண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு இரண்டு வரிகளாகப் பாடி இணைத்தவை. முதல் இரண்டு வரிகளை இளஞ்சூரியர் பாடி நிறுத்தினால் அப்புறம், பின்னிரண்டு வரிகளை முதுசூரியர் பாடி முடிப்பார். அந்தப் பாடல்களில் குத்தல், கேலி, நகைச்சுவை, உட்பொருள் எல்லாம் நிறைந்திருக்கும். தாமரை இலைத் தண்ணீரைப் போல் உலகத்தில் வாழ்ந்து கொண்டே அங்கு நிறைந்துள்ள ஆசாபாசங்களில் ஒட்டாமல், அவைகளை அலட்சியமாக நோக்கிச் சிரித்துக் கொண்டே போகும் போக்கை இரட்டையர்கள் இயற்றிய சில பாடல்களில் காணலாம்.

இந்த இரட்டையர்கள் ஒரு சமயம் திருவண்ணமலைக்குப் போயிருந்தார்கள். சம்பந்தனைச் சந்திப்பதற்குச் சென்றார்கள். அவர்கள் போன சமயம் அதிகாலை நேரம் சம்பந்தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பரிகாரியிடம் தலைச் சவரம் செய்து கொண்டிருந்தார். வாயிற்படியேறி வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள் இரட்டையர்கள். அவர் சவரம் பண்ணிக்