பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தமிழ் இலக்கியக் கதைகள்

அளித்தாலும் நிகராகாத அழகுக் கீர்த்தனங்களை எழுதிய கவி, அலைந்து திரிந்து எங்கும் பத்து ரூபாய் கிடைக்காத ஏக்கத்தோடு ‘பாப்பையவேள்’ என்ற சீமானிடம் போய்க் கடைசி முயற்சியாகக் கேட்டுப் பார்க்கக் கிளம்பினார்.

போனார்; பாப்பைய வேளைச் சந்திக்கவும் சந்தித்தார்; “எனக்குக் கொஞ்சம் கையில் முடை, அவசரமாக ஒரு பத்து ரூபாய்ப் பணம் வேண்டும். இந்தச் சமயத்தில் நீங்கள்தான் உதவி செய்து காப்பாற்ற வேண்டும்” என்று வாய் விட்டுக் கேட்டார்.

பாப்பைய வேள் சிறிது சிந்தித்தார். இவ்வளவு பெரிய கவி எண்ணிப் பத்தே பத்து ரூபாய் கேட்கிறாரே என்று யோசித்தாரோ, என்னவோ? ஆனால் அருணாசலக் கவியோ பாப்பைய வேளின் தயக்கத்தைக் கண்டு அவரும் இல்லையென்று கையை விரித்து விடுவாரோ என்று எண்ணி அஞ்சினார். அந்த அச்சம் அவருடைய கவி உள்ளத்தை ஒரு அழகான கவிதையைப் படைக்கச் செய்துவிட்டது. அந்தப் பாட்டில்தான் எவ்வளவு குழைவு என்ன நைச்சியம் எத்தனை விநயம்!

பத்துரு பாயனைநேர் பாப்பையவே ளேயுனக்குப்
பத்துரு பாயென்ன பஞ்சமோ-முத்தநகை
விழிவாய்ப்பாலுண்ட வேந்தன் பிறந்தசீ
காழியருணாசலன்யான் காண்”

(பெருந்தொகை 1766)

பத்து ரூப ஆயன் = தசாவதாரம் எடுத்த திருமால், விழிவாய் = கொவ்வைக் கனிபோன்ற வாய், முத்தநகை = உமை, வேந்தன் = ஞானசம்பந்தன்.

பத்துருபாய் எத்தனையோ பேருக்குத் தேவைப்படுகிறது! ஆனால் அதை இப்படி உள்ளமும் சொல்லும் தொனியும் குழையக் குழைய ஒரு பாட்டாக்கிக்கேட்க அருணாசலக்கவியால் மட்டும் தானே முடிகிறது?