பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

183

எல்லோரையும் போல் அவரையும் வரிசையில் உட்காரச் செய்து இலையைப் போட்டுப் பரிமாறினாள் ஆச்சாள். காளமேகப் புலவருடைய முகத்தையோ, கைகளையோ பார்த்து, அளவறிந்து, தேவையறிந்து பரிமாறவில்லை. அவள் சோற்றைப் போட்டாள். சோற்றோடு சரிக்குச் சரி கல்லும் கலந்திருந்தது. கீரைக் கூட்டுப் பரிமாறும் போது காளமேகப் புலவர் போதும் போதுமென்று கையை நீட்டி மறித்தும் கவனிக்காமல் காவேரியாற்றின் வெள்ளத்தையே இலையிற் கொண்டு வந்து கவிழ்ப்பது போல் கொட்டி விட்டாள் ஆச்சாள். இலை தாங்க முடியாமல் நாற்புறமும் பெருகி ஓட்டமெடுத்தது கீரைக் கூட்டு. காளமேகப் புலவருக்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்தது. பொறுத்துக் கொண்டார். அடுத்தபடியாக ஆச்சாள் புளிக் குழம்பை எடுத்துக் கொண்டுவந்து பரிமாறினாள். புளிக்குழம்பு நன்றாகக் காயவில்லை.

காளமேகப் புலவர் கையை உதறி விட்டுத் துள்ளியெழுந்தார். எழுந்து நின்று ஆச்சாளை எரித்து விடுவது போல் பார்த்தார். சுற்றிலும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர்களையும் பார்த்தார். அவர் ஒரு பாட்டைப் பாடினார்.

நீச்சாற் பெருத்திடு காவேரியாற்றை நிலைநிறுத்திச்
சாய்ச்சாள் இலைக்கறிச் சாற்றையெலாம் அது தானு மன்றிக்
காய்ச்சாப் புளியும்நற் கல்லுடன் சோறும் கலந்து வைத்த
ஆய்ச்சாளை யான்மற வேன்மறந் தால்மனம் ஆற்றிடுமோ”

இலைக்கறிச்சாறு = கீரைக்கூட்டு

ஆச்சாள் இலையில் கொட்டிய கீரைக் கூட்டுக்குக் காவேரியாற்றை உவமை கூறியது பெரிய குறும்பு, நற்சோறுடன் கல்லும் சமைத்து என்று சொல்லாமல் ‘நற்கல்லுடன் சோறும்’ என்று கல்லுக்குப் பெருமை கொடுத்தது சோற்றை விடக் கல் நன்றாயிருந்தது என்று குத்திக் காட்டுவதற்காகவே! ஆச்சாளுடைய அவலட்சணச் சாப்பாட்டை எத்தனையோ பேர் எவ்வளவு காலமாகப் பொறுமையாகச் சாப்பிட்டுக் காலம் கடத்தி