பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

189

‘இனி நான் எதற்காக உயிர் வாழ வேண்டும்?’ என்ற கேள்வி அவர் மனத்தில் உண்டாயிற்று. மானம் என்பது தன் நிலையிலிருந்து தாழாமை.தாழ்ந்தால் உயிர் வாழாமை அல்ல்வா? புலவர்கள் முன் போய் ‘இப்போது நான் பரம ஏழையாகி விட்டேன். கொடுப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று சொல்ல அவர் தயங்கினார். புலவர்களிடம் போனார்.

“கொஞ்சம் இருங்கள் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கொல்லை வழியாக வெளியேறினவர் திரும்பி வரவேயில்லை.

ஊரருகே பயங்கரமான வேங்கைப் புலிகள் திரியும் பெரிய காடு. அந்தக் காட்டுக்குள் புகுந்துவிட்டார். ‘இல்லை’ என்று கூறுவதற்கு மனமில்லாது காட்டுக்கு ஓடிய இந்தச் செயல் இன்று நமக்கு அசட்டுத்தனமாகப்படுகிறது. ஆனால் ‘அறம்’ என்பதே ஓர் அசட்டுத்தனமாகப்படுகிற இன்றைய வாழ்வில் நமக்கு வேறு எப்படித் தோன்ற முடியும்? செட்டிப் பிள்ளையப்பன் போல் ‘இல்லை’ என்று சொல்வதற்குக் கூசி வருந்தி விதியை நொந்து கொண்டு ஒடுகிறவர்கள் இன்று இல்லை. ‘உண்டு’ என்று கூற மறுத்து ஒடுகிறவர்களே இன்று மிகுதியாக இருக்கிறார்கள்.

இட்டமான கவிசொல்லும் பாவலர்க்கு
இல்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்
துட்டவன் புலித் தூற்றிற் புகுந்தவன்
தூயவன் கணவாள குலத்தினன்
செட்டிப் பிள்ளைய்ப்பன் தினந்தொண்டு செய்
தேவிமா மலைமாது ஒரு பங்குள
கட்டுசெஞ்சடை அமர விடங்கனார்
கதித்துவாழ் பாரியூர் எங்களுரே”

மருந்து மரம்போல் நின்று சமுதாயத்தின் ஏழைமை நோய் தீர்க்க இப்படி எத்தனையோ வள்ளல்கள் தேவை! பாட்டைப் பாடிய புலவரும் பாரியூர்க்காரர் போல் இருக்கிறது! அவரைத் தம்மூர்க்காரர் என்று கூறுவதிலேயே பெருமைப்படுகிறார் புலவர்.