பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழ் இலக்கியக் கதைகள்

நல்ல மனிதனாக அந்த ஒருவன் பூதன் என்ற பெயரோடு இருந்து வந்ததனால்தான் மழை பெய்து வந்தது.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில், வயிறு காய வந்த ஒளவையார், நல்லவேளையாகப் பூதனுடைய கண்ணிலே பட்டார். புல்வேளுரைப் பற்றி அதற்கு முன்பு தெரிந்துகொள்ளாத அவர் பூதனைக் காண்பதற்கு முன் சந்தித்த இரண்டொருவர் மூலம் அது எத்தகைய ஊர் என்பதைத் தெரிந்துகொண்டார். விருந்து கண்டால் வருந்தி ஒளிந்து கொள்பவர் புல்வேளூர்ப் பொதுமக்கள் என்ற நிலையைப் புரிந்து கொள்ள ஒளவையாருக்கு வெகு நேரம் ஆகவில்லை. காளான்களுக்கு நடுவில் குண்டுமல்லிகை போல் பூதன் அங்கே இருப்பதும் தெரிந்தது. வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்திட்டான் பூதன். அவன் அந்த அரும்பசிப் போதில்அள்ளி இட்ட வரகரிசிச் சோறு அமுதமாக இருந்தது.

அப்போதுதான் வடித்து இறக்கியிருந்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வதக்கலையும்ஆவி பறக்கும் சூட்டோடு இலையில் படைத்தபோது ஒளவையார் இந்த உலகத்தையே மறந்து சுவைத்து உண்டார். மொர மொரவென்று புளித்த கெட்டியான மோரை ஊற்றினபோது அந்தச் சுவை பன் மடங்காயிற்று. தரமாகச் சமைத்திருந்தாள் புல்வேளுர்ப் பூதனின் மனைவி, வரகரிசியைக் குத்திப் புடைத்துச் சோறு சமைக்கும் பழக்கம் அவளுக்குக் கைவந்த பயிற்சி. எண்ணெய் கொட்டி வாட்டியிருந்த கத்தரிக்காய் வதக்கல் உலகம் பெறும். பசியார உண்டபின் பூதனுடைய காலமறிந்து செய்த நன்றிக்கு என்றும் அழியாத ஒரு பதில் நன்றியைத் தாமும் செய்ய விரும்பினார் ஒளவையார்.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமு ரெனவே புளித்த மோரும்-தரமுடனே
பல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்”

வழுதுணங்காய் = கத்தரிக்காய், பரித்து = அன்பு கொண்டு.