பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

55

ஒளவையாருடைய வாழ்வில் நிகழ்ந்த இரு சம்பவங்களைப் பற்றி அவரே பாடியனவாகக் கிடைக்கும் இரண்டு பாடல்களில் கொடுப்பவர், கொடுக்கப்படுபவர் ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள இத் தராதரம் அற்புதமாக விளக்கப் பெற்றிருக்கின்றது.

மலைவளம் நிறைந்த சேர நாட்டையும் சேர அரசனையும் காண வேண்டும் என்ற அவாவுடன் ஒளவையார் ஒருமுறை சேரநாடு சென்றிருந்தார். சேரநாட்டின் தொடக்கத்தில் ‘நாஞ்சில் நாடு’ என்ற வளமும் வனப்பும் பொருந்திய பகுதி இருக்கின்றது. அப்போது இந்த நாஞ்சில் நாட்டுப்பகுதியை நாஞ்சில் வள்ளுவன் என்ற சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒளவையார் சேர நாட்டிற்கு வர இருக்கிறார் என்பதை அறிந்த அவ்வரசன் அவரைச் சிறந்த முறையில் வரவேற்பதற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான்.

ஒளவையாருடன் பாணர் குடியைச் சேர்ந்த வேறு சில விறலிய மகளிரும் வந்திருந்தனர். நாஞ்சில் வள்ளுவன் எல்லோரையும் அன்போடு வரவேற்றுத் தன் விருந்தினர்களாகத் தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அவன் ஒளவையாரிடம் மிக்க அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டான். அவனது விருந்தினர்களாகத் தங்கியிருந்தாலும் ஒளவையாரும் உடன் வந்த பெண்களும் தாங்கள் உண்ணுவதற்குப் போதுமான உணவை தங்கள் கையாலேயே சமைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று விரும்பினர். ஒளவையாரும் அதற்குச் சம்மதித்துவிட்டார். அவர்கள் விருப்பப்படியே அரண்மனையில் உணவு சமைத்துக் கொள்வதற்கு ஒரு பகுதியில் அவர்களுக்கு வசதி செய்து கொடுத்தான் நாஞ்சில் வள்ளுவன்.

நாஞ்சில் நாட்டிலே கீரை மலிந்து கிடைக்கும் காலம் அது. மனைக்கு மனை கீரை பயிரிட்டிருந்தார்கள். விறலியர்கள் தங்கள் வளையணிந்த கைகள் சிவக்க நிறையக் கீரை பறித்து வந்து சமைத்தார்கள். கீரைக் கூட்டுக்குத் தாளிதம் செய்வதற்கு