பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

 சங்க இலக்கியங்களைப் பாடினர் எனக் கருதுதற்குத் தக்க சான்றுகள் இல்லை.

இலக்கியச் சான்றுகள்

இறையனார் களவியல் உரை தரும் செய்திகள்

'கடலால் கொள்ளப்பட்ட தென் மதுரையில் முதற் சங்கமாகிய தலைச்சங்கம் இருந்தது. திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றம் எறிந்த குமரவேள், அகத்தியர். முரஞ்சியூர் முடி நாகராயர், நிதியின் கிழவன் முதலான 549 புலவர்கள் அச்சங்கத்தில் வீற்றிருந்தனர்; 4449 புலவர்கள் பாடினர். அவர்கள் பாடிய முதுநாரை, முதுமுருகு, பெரும்பரிபாடல், களரியாவிரை முதலான நூல்கள் மறைந்துபோயின. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக 89 மன்னர்கள் தலைச் சங்கத்தைப் புரந்தனர். அச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலவியது. புலவர்க்கு அகத்தியமே இலக்கண நூலாக விளங்கியது.

"இடைச்சங்கம் கடல் கொண்ட கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நிலவியது; இருந்தையூர்க் கருங்கோழி, சிறு பாண்டரங்கன், துவரைக் கோமான், கீரந்தை, வெள்ளூர் காப்பியன், திரையன் மாறன் உள்ளிட்ட 59 புலவர்கள் வீற்றிருந்தனர்: 3700 புலவர்கள் பாடினர். கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல், மாபுராணம், பூத புராணம், தொல்காப்பியம் முதலான பல நூல்கள் தோன்றின. இவற்றுள் இன்று தொல்காப்பியம் ஒன்றே கிடைத்துள்ளது. வெண்டேர்ச் செழியன் முதலாக மூடத் திருமாறன் ஈறாக 59 மன்னர்கள் இச் சங்கத்தைப் புரந்தனர்.