பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்'

இது வறுமையால் வாடும் பாணன் ஒருவனது அடுப்பங்கரை வருணனை.

ஈன்று அணிமைப்பட்ட நாய், குட்டிக்கும் பால் கொடுக்க முடியாமல் அடுப்பங்கரையில் குரைத்துக் கொண்டிருக்கிறது என்பது வறுமைச் சித்திரம்.

பிறர்தம் வறுமை நிலையைக் காணாதவாறு கதவை அடைத்துக்கொண்டு பாண்மகள் ஒருத்தி உப்பும் இல்லாமல் வேகவைத்த வேளைக் கீரையை உண்கிறாள்.

'ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்'

இதில் நல்லியக் கோடனின் வீரமும் கொடையும் சிறப்பிக்கப்படுகின்றன.

4. பெரும்பாணாற்றுப்படை

இது 500 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவால் அமைந்தது; பாணன் ஒருவன் மற்றொருபாணனைத் தொண்டைமான் இளந்திரையளிடத்தே ஆற்றுப்படுத்துகிறான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாராவர்.

‘இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி’ (அடி- 467) எனப் பேரியாழ் சிறப்பிக்கப்படுதலால் இது பெரும்பாணாற்றுப்படை என வழங்கலாயிற்று.