பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

'ஐவகை நிலங்களின் வருணைகளும் அவ்வந் திலங்களில் வாழும் பல்வகைச் சாதியார் இயல்புகளும், அவர்கள் தத்தமக்கு ஏற்றவாறு விருந்தினரை உபசரிக்கும் திறமும் இப்பாட்டில் அழகாகத் தரப்பட்டுள்ளன.

இளந்திரையன் பாணர்களை உபசரிக்கும் இயல்பு அழகாகப் புனைந்துரைக்கப்படுகிறது.

'பாசியன்ன சிதர்வை நீக்கி
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் உடீஇ'

இத்தொடர்கள் பாணரின் சுற்றத்தினருக்கு வேந்தன் ஆடை வழங்கிய திறத்தை விளக்குகின்றன.

'கொட்டைப் பாசியின் வேரை ஒத்த கிழிந்த ஆடையை நீத்து விளங்குகின்ற நூலாற் செய்த பாலாவியை ஒத்த துகில்களைக் கரிய பெரிய சுற்றத்தாரோடு சேர உடுக்கப் பண்ணி' என்பது இத்தொடர்களின் கருத்தாகும்.

5. மலைபடுகடாம்

இது 583 அடிகளைக் கொண்டது; ஆசிரியப்பாவில் அமைந்தது; கூத்தனை ஆற்றுப்படுத்துவதால் 'கூத்தராற்றுப்படை' என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.

செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகர் - பாடியது.

“மலைபடுகடாஅம் மாதிரத்து இசைப்ப” என்ற அடி மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டு மலை படுகடாம்' என வழங்குகிறது.