பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நன்னனது கவிர மலைச் சிறப்பு, மலைச்சாரலின் "வளம், அச்சாரலில் வாழும் குறவர்கள், மலைப்பக்கத்துத் திகழும் பல்வகை ஓசைகள், நன்னனது ஊரின் பெருமை. அவன் கூத்தர், விறலியர்களுக்குப் பரிசில் நல்கும் சிறப்பு. முதலியன இதில் கூறப்படுகின்றன.

இவை ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.

6. முல்லைப்பாட்டு

வினைமேற் கொண்டு பிரிந்து சென்ற கணவன் மீளுந்துணையும் தலைவி ஆற்றியிருத்தல் முல்லைத் திணையாகும். இது 103 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பாவால் அமைந்தது; அகப் பொருளைப் பற்றியது.

தலைமகனைப் பிரிந்த தலைவியின் பிரிவுத்துயரும், அவள் ஆற்றியிருக்கும் திறனும், வினை முடித்து மீளும் தலைவன் நிலையும் இதில் கூறப்படுகின்றன. இதனைப் பாடியவர் நப்பூதனார் என்பவர்.

போர்க் காரணமாகத் தான் பிரிதலைத் தலைவன் குறிப்பால் உணர்த்தத் தலைவி அதனைத் தாங்காமல் துன்புறுகிறாள். “அவள் வினைமுடித்து மீளல் உண்மை; நீ வருத்தம் நீங்குக” என்று பெருமுது பெண்டிர் ஆறுதல் கூறி அவளைத் தேற்றுகின்றனர்.

பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும், பாசறையில் மன்னன் தன்படைகளுக்குத் துணையாகிக் கடமையில் கண்ணுங் கருத்துமாய்ச் செயலாற்றலும், தலைவி தலைவனைக் காணாது துயருழத்தலும், கார்கால வருணனையும் இதில் கூறப்படுகின்றன.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்