பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

‘திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்'

(சிறுபாண். 130-132)

என்பது வறுமை பற்றித் தீட்டிய சித்திரமாகும். இது தன்மை நவிற்சியாகும்.

உவமைத்திறன்

வினை, பயன், மெய், உரு எனும் நான்கன் அடிப்படையில் உவமைகளை அமைத்தனர்; உயர்ந்த பொருள்களையே உவமைகளாகக் கூறினர்.

‘தாமரைத் தண்தாது மாதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை'

-நற்

தலைவனின் நட்பின் திறத்திற்கு உயர்ந்த சந்தன மரத்தில் தொகுத்த தாமரை மலர்த்தேனை உவமையாகக் காட்டுகிறாள் தலைவி, உயர்ந்த பொருளை உவமையாகக் காட்டும் அழகை இங்குக் காணலாம்.

வெளிப்படையாக அன்றி உள்ளுறையாகவும் உவமம் கூறுதல் சங்கப் பாடல்களின் தனி அழகாகும்.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்'

(குறுந். 8)

இதில் உள்ளுறைப் பொருள் அமைந்து கிடத்தலைக் காண்க.

உயர்ந்த கோட்பாடுகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் உயர்ந்த கோட்பாட்டைச் சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது.