பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கலைச் செல்வம்

மாதவியின் படைப்புத் தன்னிகரற்று விளங்குகிறது. அரங்கேற்று காதையில் நடன அரங்கின் அமைப்பும், பல்வகை வாத்தியங்களின் வகையும் இசை நுணுக்கங்களும் சிறப்பிக்கப்படுகின்றன. கானல் வரிப் பாடல்களில் மாதவியின் இசைப் புலமையும், வேனிற் காதையில் அவள் ஆடிய கூத்து வகைகளும் விளக்கப்படுகின்றன. இளங்கோ தாம் ஓர் கலைச்செல்வர் என்பதை இக்காவியத்தில் காட்டுகிறார். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் இயல்பையும். தமிழ் நாட்டில் விளங்கிய பழங்கலைகள், தொழில் வகைகள், நாடு, நகர அமைப்புகள் முதலியவற்றையும் இதில் காணமுடிகிறது.

மணிமேகலை

இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாராவார் சிலம்பின் காலமே மணிமேகலை காலமாகும். சிலம்பைப் போலவே இந்நூலும் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இது முப்பது காதைகளைக் கொண்டு விளங்குகிறது.

மணிமேகலை மாதவியின் மகள். அவள் துறவு பூண்டு உலகத்துக்கு அறிவுரை கூறும் சமயத் தலைமையைப் பெறுகிறாள், கோவலன் இறப்பே இதற்குக்காரணம். சித்திராபதி மணிமேகலையை ஆடல் மகளாகக் காண விரும்புகிறாள். தாய் மாதவியின் அறிவுரைப்படி துறவும், தொண்டுமே வாழ்க்கையின் நெறிகள் என மணிமேகலை கொள்கிறாள். அறவண அடிகள் அவளுக்குச் சமய அறிவினை ஊட்டுகிறார். புத்தமதக் கோட்பாடுகளை அறிந்து புத்ததேவனை வழிபட்டுச் சமயவாதிகளோடு வாதிட்டுப் பிறவித் துன்பம் நீங்கத் தவமியற்றுகிறாள். இதுவே இவள் வாழ்க்கையின் முடிவாக அமைகிறது.