பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

யானை மறம், குதிரை மறம். அரசன் வெற்றி, ஈகை முதலான பல செய்திகளை அழகிய வெண்பாக்களால் இந்நூல் கூறுகின்றது. கைக்கிளை ஒழுக்கத்தைச் சார்ந்த இனிய காதற் பாடல்களையும் இதில் காணலாம். நள வெண்பாவினை நிகர்க்கும் வெண்பாக்களை உடையது இது. இதன் காலம் பி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு என்பார் சதாசிவப்பண்டாரத்தார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

“கச்சி யொருகால் மிதியா ஒருகாலால்
தத்து நீர்த் தண் உஞ்சை தான் மிதியாப்-பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே நம்
கோழியர்கோக் கிள்ளி களிறு

என்பது சோழ மன்னனின் யானை மறத்தை இயம்பும் பாடல்.

புறப் பொருள் வெண்பாமாலை

இதன் ஆசிரியர் ஐயனாரிதனார். காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. இது புறப்பொருள் பற்றி எழுந்த பொருள் இலக்கண நூலாகும், கொளு சூத்திரயாப்பாலும்; எடுத்துக்காட்டு வெண்பா யாப்பாலும் இதில் அமைந்துள்ளன. இது பன்னிரு படலத்தைப் பின்பற்றி அமைந்துள்ளது.

நிகண்டுகள்

இக்காலத்தைப் போலப் பண்டைக் காலத்துச் சொற்களுக்குப் பொருள் கூறும் அகராதிகள் தோன்றவில்லை. நிகண்டுகள் அப்பணியைச் செய்து வந்தன. நிகண்டுகளுள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது திவாகரமாகும். இதன் காலம் 10ஆம் நூற்றாண்டு, ஆசிரியர் திவாகர முனிவர். இக்காலத்திலேயே பிங்கலர் இயற்றிய பிங்கல நிகண்டும் மண்டல புருடன் இயற்றிய சூடாமணி நிகண்டும் தோன்றின .