பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இவற்றைத் தொடர்ந்து பதினைந்தாம் நூற்றாண்டுக்கு மேல் உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, அகராதி நிகண்டு முதலியன தோன்றின.

பெளத்த சமண நூல்கள்

பெளத்தர்கள் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை மணிமேகலையும், குண்டலகேசியுமாகும். மணிமேகலை சங்கம் மருவிய காலத்ததாகும். இவை இரண்டும் ஐம்பெருங் காப்பியங்களைச் சார்ந்தன.

வீரசோழியம் எனும் இலக்கண நூலும் புத்தமித்திரர் எனும் பெளத்தரால் இயற்றப்பட்டதே: இதன் காலம் பதினொன்றாம் நூற்றாண்டு.

பெளத்தர்களைவிடச் சமணர்களே இலக்கிய இலக்கணங்களை மிகுதியாக எழுதியுள்ளனர். ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் (சங்கம் மருவிய காலம்), சீவக சிந்தாமணி (சோழர் காலம்), வளையாபதி (சோழர் காலம்) எனும் மூன்றும் சமணச் சார்புடைய இலக்கியங்களாகும். சிறுகாப்பியங்கள் ஐந்தும் சமணர்கள் இயற்றியனவே. எஞ்சியவற்றைக் காப்பியங்கள் எனும் தலைப்பில் காண்க.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் நாலடியாரும், பழமொழியும், சிறுபஞ்ச மூலமும், ஏலாதியும் சமணரால் இயற்றப்பட்டவை.

வாமன முனிவர் எழுதிய மேருமந்திர புராணமும் (கி.பி. 14ஆம் நூற்றாண்டு) சமண நூலே.

இலக்கண நூல்களுள் யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை, நன்னூல், நேமிநாதம். வெண்பாப்பாட்டியல், நம்பியகப் பொருள் முதலியன சமணர்கள் இயற்றியவையே.