பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

சூரன் வதைப் பரணி, இரணியவதைப் பரணி, பாசவதைப் பரணி, திருச்செந்தூர் பரணி முதலியன நாயக்கர் காலத்தனவாகும்.

குறவஞ்சி

இஃது ஒரு நாட்டிய நாடகமாகும். பவனிவரும் தலைவனைக் கண்டு மயங்கிக் காதல் கொள்ளும் தலைவியின் கையைப் பார்த்துக் குறத்தி குறிசொல்லிப் பரிசில் பெறுதலும், குறத்தியைத் குறவன் தேடி வருதலும், இருவரும் கலந்து உரையாடி மகிழ்தலும் இதில் கூறப்படும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். நாடு, நகர், மலை, தலம் முதலியவற்றின் வருணைணைகள் இதில் இடம் பெறும், குறவஞ்சிகளுள் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய திருக்குற்றாலக் குறவஞ்சி தலைசிறந்ததாகும்.

சைவ மடங்களின் தமிழ்த் தொண்டு

சைவ மடங்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகள் அளப்பரியன. இம் மடங்களால் பெரும்புலவர்கள் பலர் ஆதரிக்கப் பெற்றனர்.

தருமபுர மடத்தைச் சார்ந்த குமரகுருபரர் பல அரிய தமிழ் நூல்களை எழுதினார்: வடநாடு சென்று தமிழ் பரப்பினார். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், கயிலைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை, நான்மணி மாலை முதலியன இவர் பாடியனவாகும். இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபுலிங்க லீலை முதலாய பல நூல்களை எழுதியுள்ளார், பிரபுலிங்க லீலை சிவபெருமானைத் தலைவனாக்கித் தத்துவக் கொள்கைகளுக்கு உருவவடிவு கொடுத்துக் கற்பனை நயம் விளங்கப் பாடப்பட்டதாகும். இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.