பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

1970-73 காலப்பகுதியில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக எமது தந்தையார் இருந்தார். இந்தக் காலத்தின் இடைப்பட்ட ஆண்டான 1971இல் 'சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுச் சொற்பொழிவை' அங்கு நிகழ்த்தியுள்ளார். இச்சொற்பொழிவில் 'தமிழ்நாடக வரலாறு' என்ற ஒரு கட்டுரையையும் சங்கரதாச சுவாமிகள் - நாடக ஆசிரியர் என்ற தலைப்பிட்டு இன்னொரு கட்டுரையையும் சமர்ப்பித்திருந்தார்.

இதற்குப்பின் தந்தையார் எழுதியிருந்த பல நூல்களும் வெளிவந்தபோதும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்மால் வெளியிடப்பெறாமல் மறக்கப்பட்டிருந்த கட்டுரைகள் இவையாகும். இவை மட்டுமன்றித் தந்தையாரால் எழுதப்பெற்று, நூலாக வெளிவராத இன்னும்பல கட்டுரைகளும் இருக்கின்றன. நாளடைவில் அவற்றையும் தொகுத்து நூல்வடிவில் வெளிக்கொண்டுவர, தந்தையாரின் ஆசிகளும் இறைவனின் திருவருளும், நண்பர்களின் உதவியும் துணை நிற்கும் என்றே நம்புகிறோம்.

இவ்விரு கட்டுரைகளும் முத்தமிழில் ஒன்றான நாடகம் சார்ந்து இருந்ததால் தனி நூலாகப் பிரசுரிக்கும் எண்ணம் எழுந்தது. எனவேதான் "தமிழ்நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்” என்று தலைப்பிட்டு இதனை வெளியிட விரும்பினோம்.