1. பொது வரலாறு
43
'ஒரு கருத்தை நான் உறுதியாகச் சொல்வேன்--- என்னைப் பொறுத்த அளவிலாவது, முதலில் ஒரு தொடர் கதையை எழுதிவிட்டுப் பிறகு அதை ஒரு நல்ல நாவலாக ஆக்குவது என்பது முடியாத காரியம். பொதுவாகச் சொன்னால் நாவலாசிரியர்கள் தொடர்கதை எழுதும் மனோபாவம் உடையவர்கள் அல்ல. அற்புதமான தொடர் கதைகள் எழுதுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய படைப்பு, இலக்கிய மனோபாவம் உடையவர்கள் வெறுக்கும் தன்மையுடையது அன்று, ஆனாலும் அவர்கள் நாவலாசிரியர்கள் அல்லர்'[1] என்கிறார்.
ஆனால் மார்கரெட் கல்கின் பானிங் (Margaret Gulkin Banning) என்ற ஆசிரியையோ இதற்கு மாறான கருத்தை வெளியிடுகிறார்; 'எனக்குத் தெரிந்த வரையில் தொடர்கதை எழுதுவதில் ஒரு தந்திரமும் இல்லை. வேறு எந்தக் கதையிலும் இருக்கிற மாதிரி இங்கே கதையின் கருத்து முக்கியமானது. பாத்திரங்களும் அப்படியே. பத்திரிகைக்காரர்கள் ஆசிரியரைக் கேட்பது என்ன? "மனிதர்களைப் பற்றி எழுதுங்கள்" என்கிறார்கள். "அவர்களை ஜீவனுள்ளவர்களாகச் செய்யுங்கள்" என்கிறார்கள். தான் படைத்துப் பத்திரிகையின் பக்கங்களில் உலாவவிடும் பாத்திரங்கள், படிப்பவர்களின் கற்பனையுணர்வில் பாய்ந்து வாழும்படி செய்வது தான் தொடர்கதைக்கு வெற்றி; இது தானே நாவலின் நோக்கம்? என்று கேட்கிறார்.[2] வேறு ஒருவர் பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளில் ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவும் சுவாரசியமும் ஆவலும் தீட்டும்படி முடிகிறது என்று சொல்கிறார்களே, அது ஒரு தவறா? அப்படியானால் நாடகங்களில் ஒரு காட்சியின் முடிவு மிகவும் சுவாரசியமாக நின்று