பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழர் திருநாள்



வீரமிக்க என்வெற்றித் தமிழே யுன்னை
வேரறுக்கத் துணிந்துசில வீண ரெல்லாம்
ஊரறியப் பலமுயற்சி செய்தார் பின்னர்
உன்மக்கள் தமைப்பிரித்து வைத்தார். ஆனால்,
சீரகமாம் தமிழகத்தில் செழித்த உன்றன்
செம்மைதனை நீக்குதற்கு முயன்ற பேரை
வேருடனே பறிப்போமென் றார்ப்ப ரித்து
வீறுடனே யுன் மக்கள் கிளம்ப லானார் !

நெடுஞ்செழியன் ஆரியத்தின் படைக டந்தான்
நெடுங்கதையாம் சிலப்பதிகா ரத்தை நாட்டிக்
கொடுத்தஇளங் கோவினுடை யண்ண னந்தக்
கொடியவரைச் சிறையிட்டான். பின்வ டக்கே
படையெடுத்துக் கலிங்கத்தை வென்று வந்து
பாரரசன் அநபாயன் பரணி கொண்டான்.
தடைக்கற்கள் வருந்தோறும் தாவித் தாண்டித்
தாரணியிற் புகழடைந்தார் தமிழ மக்கள் !

முயற்சியெலாம் ஊரறியச் செய்து விட்டால்
முன்னேறும் தமிழ்மக்கள் கோபம் கொண்டு
துயர்கொடுப்பார் என்றறிந்த சூழ்ச்சிக் காரர்
தூயசில நூல்கள்தமைத் தீயி லிட்டார்.
கயலோடும் நீரிலிட்டார் ! கயமைத் தன்மை
காய்த்ததனால், பழுத்ததனால், காரங் கொண்டு
வியத்தக்க நூல்களுள்ளே சிலபாட் டுக்கள்
வேண்டுமென்றே புகுத்தியவர் தமிழ்கெ டுத்தார்!