பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

99

கட்கும் உட்பட்ட சுவாமிகள் தம் குருநாதரையும் வழிபடு கடவுளையுமே நம்பிச் செயலில் முனைந்தார்கள். தம் கல்வியறிவைப் பெருக்கிக் கொள்ளவும் பேரவாக் கொண்டு ஒரு சிறு பொழுதையும் வீணாக்கினார்களல்லர்.

புருகேஸ்பேட்டை என வழங்கப் பெறும் முருகேச நகரில் அந்நாள் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்த திரு.பழநியாண்டி முதலியராவர்கள் இம்மடாலய சீடர். தெய்வப் பற்று மிக்கவர். குரு பீடத்தில் அடங்காத பக்தி பூண்டவர். அவர்க்குக் கடல் கடந்த நாடுகளில் வாணிகத் தொடர்பு உண்டு. அங்கே சில கடைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர் முன்வந்து தானே பணம் தந்து கடன் தொல்லையினின்று மடத்தை மீட்டனர். பின்னர், அவருக்கு அப்பணம்கொடுக்கப் பெற்று விட்டதெனினும், காலத்தினாற் செய்த அந்நன்றியைச் சுவாமிகள் யாவரிடமும் பாராட்டிக் கூறுவார்கள். பின்னாளில், அப் பழநியாண்டி முதலியார் பின் வந்தோர் நொடிந்துவிட்ட நிலையில், அவரை உணவு முதலியவற்றால் இம் மடாலயம் உபசரித்ததும் உண்டு. ஆறாம் குருநாதர் எழுந்தருளி யிருந்த போதும் அவர் ஆதரிப்புப் பெற்றதுமுண்டு.

கல்வி : இனி. அடிகளாரது கல்வி வளர்ச்சி பற்றிக் காண்போம். முன்னரே குறிப்பிட்டவாறு, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளை எழுதவும் படிக்கவும் கற்றிருந்த நம் சுவாமிகள் தம் கல்வியைப் பெருக்கிக் கொள்ளப் பேரவாக் கொண்டிருந்தனர். தென் மொழியைக் கற்கும் அவா மேலீட்டினால் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயரவர்களைத் தம் மடாலயத்திற்கு வருவித்து நாள்தோறும் குறிப்பிட்ட வேளையில் அமர்ந்து தமிழ் நூல்களைக் கற்கத் தொடங்கினார்கள். மாணவர் இலக்கணம் யாவையோ, அவைகளினின்றும் சிறிதும் மாறாமல் தம் ஆசிரியருடன் பழகிக் கல்விச் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். 'உடையார் முன் இல்லாற் போல் ஏக்கற்று'க் கற்றார்கள். திருவள்ளுவர் அவாய் நிலையான் விட்ட (தலையாயர் என்ற) சொல்லுக்கு இலக்காயினார்கள், -

பாடற் பரிசு : ஆசிரியர் யாப்பிலக்கணம் கற்பித்து வருங்கால், ஓர் வெண்பா எழுதி, அதற்கு வாய்பாடு, சீர், தளை முதலிய வெல்லாம் எழுதித் தயாராக வைத்திருந்து அடுத்த நாள் காட்டச் சொல்லிச் செல்வது வழக்கம். அவ்வழக்கப் படியே ஒரு நாள்,