பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

109

முன் குறிப்பிட்ட, சேந்த மங்கலம் மாநாட்டுக்குக் கும்பகோணம் வில்வராய நல்லூரைச் சார்ந்த சா. முத்துக் குமரப்ப உடையார், சாத்தனூர் - சுப்பராய முதலியார், (இவ்விருவரும் சிறந்த நில உரிமையாளர்கள்) மாரண்டஹள்ளி மிட்டாதாரர்களான இரத்தின உடையார், ஆறுமுக உடையார் ஆகியோரும், ‘பார்க்கவ பந்து என்ற மாத இதழ் நடத்திய எம். ஆர். வேங்க டாசல உடையார் முதலிய பெருஞ் செல்வர்களும் வந்திருந்தார்கள்.

சுவாமிகளின் சொல்லமுதம், அமுதத்தினும் இனியதாய் நெஞ்சை விட்டு நீங்காதவனாய் உள்மாசு கழுவும் உயர் நீர்மையினதாய் உள்ளமையைச் சொல்லிச் சொல்லிச் சுவாமிகளைப் பிரிய மனமின்றிக் கலங்கினர். தம் நினைவுகுறியாக முழுதும் பொற்கசவமிட்ட உருத்திராக்கத் தாழ்வடம் ஒன்றினைச் சுவாமிகளுக்கு அணிவித்து நன்றி கூறி வழி விடுத்தனர்.

1929 பிப்ரவரியில், திருப் பாதிரிப் புலியூரில், ஸ்ரீமத் ஞானியார் மாணவர் கழகம் ஓர் சிறப்புவிழாக் கொண்டாடியது. அவ்விழாவினுக்கு அமைச்சர் டி. என். சிவஞானம் பிள்ளையவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். அந்த விழாவில், ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களும் ஓர் சிறந்த சொற்சொழிவாற்றினார். அதனால் மிக மகிழ்ந்த மந்திரியார், அங்கு வந்திருந்த தீ. நா. முத்தையா செட்டியாரவர்களுடன் கலந்து, பிள்ளையவர்களுக்குச் சிறந்ததோர் பரிசு அளிக்கப் பெறல் வேண்டுமென முடிவு செய்தார். அவசரவேளைக்கு உதவுமெனச் சுவாமிகளுக்கு முன் சேந்தமங்கலத்தில் உடையார்களால் செய்வித்து அணிவிக்கப் பெற்ற முழுதும் பொன் கவசமிடப் பெற்ற தாழ்வடத்தைக் கேட்டுப் பெற்றார் முத்தையா செட்டியார். அவர் சுவாமிகள் திருக்கரத்தில் அளிக்க, அவர்களால், விழாத் தலைவர் சிவஞானம் பிள்ளையவர்களிடம் கொடுக்கப்பெற்று, ம. ரா. குமாரசாமிப் பிள்ளைக்கு அணிவிக்கப் பெற்றது. விழாத் தலைவர் பாராட்டுதலுக்குப் பின், சுவாமிகளும் தம் மாணவர் பேச்சுத் திறம் பற்றிப் பாராட்டிப் பேசி வாழ்த்துக் கூறியருளினார்கள். முதன்மை மாணவர் பெற்ற சிறப்பு அனைவரும் பெற்றாலன்ன அகமகிழ்வினை ஏனைய மாணவரும் அடைந்தனர்.