பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

115

பயின்றவர். பற்பல சீடர்கள் அவருக்கு உளர். அவருடைய வேண்டுகோளுக் கிணங்கிச் சுவாமிகள் அவ்வப்போது காஞ்சிபுரத்துக் கெழுந்தருள்வதும் உண்டு. சிவஸ்வாமி தேசிகரது நன்முயற்சி காரணமாக ஞானியார் சங்கம் என்ற பெயருடன் ஒர் சங்கம் தோற்றுவிக்கப் பெற்றது. அச்சங்கத்தின் விழாக்கள் பலவற்றிலும் சுவாமிகள் பங்குபற்றியதுண்டு. ஸ்ரீ ஏகாம்பரேசுவரர் விழாக்காலங்களிலும், கந்தகோட்டப் பெருமான் விழாக் காலங்களிலும், பிற ஆலய விழாக்களிலும் சமயச் சொற்பொழிவுகளுக்காகச் சுவாமிகள் பலமுறை எழுந்தருள்வது உண்டு.

காஞ்சிபுரத்து அன்பர்பலர் சுவாமிகளிடம்சிறந்த ஈடுபாடு கொண்டவர்கள். கடலூர் துறைமுக நகரில் ‘சன்மார்க்க சபை’ ஒன்று உளது. அஃது வடலூர் இராமலிங்க சுவாமிகளால் அமைக்கப்பெற்றது. அச்சபை விழாக்களிலும் நம் அடிகளார் தலைமை யேற்றருளிச் சிறப்பித்த துண்டு.

கரையேறவிட்ட குப்பம் என்ற வண்டிப்பாளையத்தில் அந்நாளில் ‘பால பக்த ஜன சபை’ என்ற ஒரு சபை நடைபெற்று வந்தது. அன்பராயினார் பலருடைய வேண்டு கோளுக்கிணங்கி நம் சுவாமிகள் பலமுறை அங்கு சென்று அருளுரைகள் நிகழ்த்தியது உண்டு.

திருப்பாதிரிப்புலியூரில் 'சரஸ்வதி விலாச சபை' என்னும் ஒரு சபையும் நடந்தது. அச்சபையும் சுவாமிகளது அரிய தலைமை, சொற்பெருக்குகளைப் பயன்படுத்திச் சிறந்ததுண்டு.

உத்தரமேரூர்ச் சைவ சித்தாந்த சபை, செங்கற் பட்டு ‘சமயாபிவிருத்தி சங்கம்,' காவித்தண்டலம் ‘சைவ சித்தாந்த சபை,' தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபை, கோவல் தமிழ்ச்சங்கம், கண்டாச்சிபுரம் தமிழ்ச்சங்கம் முதலியனவும் பிறவும் சுவாமிகளது தலைமையில் விழாக்களைக் கொண்டாடியதுண்டு. திரிசிரபுரச் ‘சைவ சித்தாந்த சபை’ சுவாமிகள் ஆங்கெழுந்தருளுங் காலங்களி லெல்லாம் அவர்களருளுரை வழங்க வழி வகுத்துக் கொண்டது. -

ஆரணியில் சுவாமிகளின் அரும் பணிகள் : வடாற்காடு மாவட்டத்திலுள்ள ஆரணியில், இம் மடாலயத்திற்குச் சொந்தமானதோர் கோயில் உள்ளது. அது, ஸ்ரீ வல்லி தேவசேனா சமேதராக, மயில்மீதிவர் முருகன், ஆறு திருமுருக மண்டலங்களும் பன்னிரு திருக் கரங்களும் கொண்டு காட்சி