பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வல்லிக்கண்ணன்

பின்னர் அதனை விரிவுபடுத்திக் கட்டிக் கொண்டு தமக்கே உரிய இடம் அது என வாதிட்டனர். அது தொடர்பாகவும் வழக்கு எழுந்தது. அதற்குரிய ஆதாரங்கள் காட்டி, அவ் வழக்கிலும் வெற்றி கொண்டவர்கள் சுவாமிகளேயாவார்கள்.

திருமுது குன்ற மடாலயம் : திருமுது குன்றமாம் விருத்தாசலத்தில், ஐயனார் கோயில் தெருவில், மடாலயத்திற்குச் சொந்தமான பழைய கட்டிடம் ஒன்று உண்டு. அது, கல் மடம் என வழங்கப் பெறுகிறது. (கல்வி கற்பித்து வந்த இடமாக அமைந்திருந்து வந்ததால் கல்வி மடம் எனப் பெயர் வழங்கிப் பின் அது திரிந்து கல்மடம் என்று வழங்கி வருதல் இயல்பாகலாம்) அங்கு உள்ளே, தண்டபாணிக் கடவுளின் திருவுருவம் இருந்தது. நம் சுவாமிகள், பழுதாகியிருந்த சத்திரத்தைப் பின் கவனிக்கலாமெனக் கருதி வெளியிடத்திலே கருங்கல் கொண்டு கோயிலமைத்து எழுந்தருள்விக்கத் திருவுளங் கொண்டருளி, வேலை தொடங்கியிருந்தார்கள். சுவாமிகள் தொடங்கியிருந்த அவ்வாறே ஆறாவது சுவாமிகள் காலத்தில் அக்கோயில் முற்றுவிக்கப் பெற்றுத் திருவுருவமும் எழுந்தருள் விக்கப் பெற்றது. இப்போது, கோயில் பூசனை, இம் மடாலயத்தின் சம்பளம் பெறுபவராலேயே செய்யப் பெறுகிறது.

சிவகுன்றம் : செஞ்சி தாலுக்கா அனந்த புரத்தையடுத்துள்ள ஒரு தனி மலை சிவகுன்றம். அங்கு இம் மடாலய முதற் குருநாதர் பல ஆண்டுகள் கடுந் தவமிருந்தார்கள். மலையடி வாரத்தில் ஒன்றும், மலைமீதொன்றுமாக இரு சுனைகள் என்றும் வற்றாத நீருடன் இலங்கும் அங்கே ஒரு கற்பிளவாம் குகையில் முதற் குருநாதரால் தாபிக்கப் பெற்ற விநாயகர், முருகன், சிவலிங்கத் திருவுருவங்கள் உள. அன்பர் பலர் வாரக் கட்டளையாக ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், கார்த்திகை நாட்களிலும் மலைவலம் வந்து திருவுருவங்களை வழிபடுவர். அவ்வவரும் எண்ணிய எண்ணியாங்கு எய்தப் பெறுதலால் மக்கள் மிகுதியாக வருதல் உண்டு. கார்த்திகை தோறும் விழாவும் நடைபெறும்.

அத்தகைய சிறப்புப் பொருந்திய இடத்தில் இறைவனை வழிபட வருவோர் தங்கி உணவு சமைத்து உண்ணவும், தாம் எழுந்தருளுங் காலங்களில் உபாசனாமூர்த்தியை எழுந்தருளப் பண்ணிப் பூசை முதலியவற்றிற்காகவும் இடவசதிகளுக்காகவும், நம் சுவாமிகள் 1928 ஆம் ஆண்டில் சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து இரும்பு வாயில்கள், குகையைச் சூழ மதிலமைத்து வாயிலும் வகுத்தல் முதலாகிய இன்றியமையாத