பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

11

முடித்து, பூக்குடலையோடு நந்தவனம் சேர்வார். அங்கு பூக்களையும் பத்திரங்களையும் பறிக்கும் போதே விநாயகரகவல், திருவாசகச் சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா முதலியவற்றை மனத்தூய்மையுடன் ஓதி மகிழ்வார். பிறகு நீராடி, காலைச்சிற்றுண்டி கொண்டு, பள்ளி செல்வார்.

மாலையில், பள்ளி முடிந்து திரும்பியதும், அன்று பயின்றவற்றையும், அடுத்த நாள் நடக்க வேண்டியவற்றையும் படித்துச் சிந்தனையில் பதிவு செய்து கொள்வது அவர் வழக்கமாகயிருந்தது. இயன்றவரை சிறிது விளையாடுவதும் உண்டு. இவ்வாறு சிறுபருவத்தில் ஒழுக்க நெறிகளை அவர் பயின்று தேர்ந்ததன் பயனாகவே அடிகளார் பின்னர் யாவர்க்கும் வழிகாட்டியருளும் சிறப்பினைப் பெற்றார் எனக் கொள்ளலாம். பதினாறு வயதுக்குள் அவர் தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், வடமொழிகளைக் கற்றறிந்திருந்தார். அத்துடன் அவர் குருநாதரிடம் சித்தாந்த சாத்திர நூல்களையும் பயின்று வந்ததும் குறிப்பிடத் தக்கதாகும்.

பழநியாண்டிக்கு பதினாறு வயது பூர்த்தியாகி, பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்தது. மடாலயத்தின் நான்காம் குருமூர்த்தியான ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இறுதிநிலை எய்தும் கட்டம் வந்து சேர்ந்தது. அவர் நாற்பத் தொரு ஆண்டுகள் பட்டமேற்றுப் பொறுப்பு வகித்திருந்தார். அவருக்குப் பிறகு யார்பட்டமேற்பது என்ற நிலை தோன்றியது. குருநாதர், சிலரது யோசனைப்படி, வேறொருவர் பெயரைக் குறிப்பிட்டு உயில் எழுதி வைத்திருந்தார். எனினும், அவர் பின்னர் மனம் மாறி, அந்த உயிலை நீக்கிவிட்டு வேறு உயில் எழுதினார். அதில் பழநியாண்டியை நியமித்து எழுதிவைத்தார். உடனேயே பழநியாண்டிக்கு சந்நியாச தீட்சையும் செய்து முடித்தார். ஆசாரிய அபிஷேகம் செய்வித்து, முறைப்படி உபதேசம் செய்து வைத்தார்.

பட்டம் ஏற்போர் அச்சமயம் சில சத்தியவாக்குகளைக் கூறி, குரு ஆணையை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும். அந்த மடாலய வரன்முறை மரபையும், சந்நியாச நிலையையும் வழுவாது கடைப்பிடித்து, தம் முன்னோர் ஒழுகி வந்த முறைப்படி, எந்தவிதக் குறைவும் நேராவண்ணம் பூசை நியமங்களைத தவறாது காப்பதுடன், மடாலய மரியாதைக்கு