பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வல்லிக்கண்ணன்

இல்லையென்றே சொல்லாம். மடாதிபதிகள் செய்யவேண்டிய அரிய செயல்களெல்லாம் திரு. ஞானியாரிடத்து நன்கு காணப்பட்டன. இக்காலத்துள்ள மற்றைய மடாதிபதிகள் இவர்கள் முறையைப் பின்பற்றுவார்களாயின் தமிழ்உலகத்திற்கே சிறந்த பயன் விளையும். இவர்கள் ஒழுகிய நெறி ஏனையோ ருக்குச் சிறந்த வழிகாட்டியதாக உள்ளதென்று கூறலாம்...”

.....இவர்கள் நினைவுக்குறியாக ஒரு தமிழ்க் கலைமாடம் சென்னையம்பதியில் நிறுவப்படுமாயின் தமிழர் நன்றியறிவு சிறந்தொன்றாகத் திகழ்வதாகும். எனக் குறிப்பிட்டுச் சுவாமி களது பெருமையை வியந்து போற்றியவர்கள் பண்டிதமணி - மு. கதிரேசச் செட்டியாரவர்கள்'.

“.... அவர்களுக்கு இவ்வளவு பெருமை ஏன்? அவர்கள் நன்கு படித்தவர்கள், ஆங்கிலம் தெரியும். வடமொழி நன்கு தெரியும். தமிழில் அவர்கள் படிப்பு மிகப் பரந்தது, ஆழமானது. இத்துடன் உலகியலறிவும் உண்டு. கற்றார்க்கும், கல்லாதார்க்கும் பயன்படும் படி பேச வல்லவர்கள். இனிமையாகப் பேசவார்கள். அவர்கள் அன்பு நிறைந்தவர்கள், ! எல்லாருக்கும் புன்சிரிப்பு; சில நல்ல வார்த்தை மடாதிபதிகள் என்ற நினைப்பு அவர்கள் வார்த்தைகளையோ, செய்கைகளையோ சுட்டவில்லை. விருந்தினரை நின்று விசாரிப்பார்கள், உளறுபவர்க்கும் கோபமின்றி அறிவு புகட்டுவார்கள். எல்லாரும் அவர்களைப் பார்க்கமுடியும். எப்போதும் பார்க்கலாம்.

அவர்கள் செய்த தொண்டுகள் பல; தங்கள் மடத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார்கள். அதற்குப் பெரும் புகழ்தந்தார்கள். பலருக்குத் தமிழறிவு புகட்டினர். கிறிஸ்தவர்களும் அவரிடம் படித்திருக்கிறார்கள். பலருக்குச் சமய அறிவு புகட்டினர். அநேகர்மனதில் அன்பெனும் விதையை நட்டார்கள். பற்பலர் வாழ்க்கையைத் திருத்தியமைத்தனர். அவர்களிடம் உபதேசம் பெற்றோர் கணக்கற்றவர். அவர்கள் சொற்பொழிவு கேட்டோர் பல்லாயிரவர்.

ஊர்தோறும் சென்று சைவ உண்மைகளைப் பரப்பியவர் சமய குரவர் மூவர். அவர்களுக்குப் பின்னர் அத்தொண்டு செய்தோர் ஒருவரையும் எனக்குத் தெரியவில்லை. அத்தொண்டை இக்காலத்தில் செய்தவர்கள் ஞானியார் சுவாமிகள்....”

இங்ஙனம் குறிப்பிட்டெழுதியவர், திருவாளர் கா. இராமநாதன் செட்டியார் B.A., B.L. ஆவர்.