பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

169


பிற்பகலில் திரு.டி.கே.சி. தலைமையில், ந. மு. வேங்கட சாமி நாட்டாரவர்களும், ச. சச்சிதாநந்தம் பிள்ளையவர்களும் பிறரும் சொற்பொழிவாற்றினர். -

சர். பி. டி.இராசன், த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, ஈ. வே. இராமசாமி நாயக்கர், டி. எம். நாராயணசாமிப்பிள்ளை, யாழ்ப்பாணம்- நடேசப் பிள்ளை முதலாயினோர் மழை, வெள்ளம் காரணமாகப் போக்குவரவு நிலை கெட்டிருந்த காரணத்தால் வர இயலாமைகுறித்து அனுப்பியிருந்த தந்தி முதலியவை படிக்கப்பெற்றன.

அச்சியற்றிய சில நூல்கள்

1. திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் :

சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணைவன் மீது நீங்காப் பற்றுக்கொண்டவர்கள். தல வரலாறு பற்றித் தாம் பட்டமேற்றுக் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே அறிந்தனர். பட்டமேற்ற சில ஆண்டுகளுக்குள் வடமொழிப் புராணம் மட்டுமே கிடைத்தது. தம் ஆசிரியர் வழி, திருவாவடுதுறை யாதீனத்திலிருந்து ஒரே பிரதியைப் பெற்றார்கள். அதனைப் பரிசோதித்துத் திருத்தியும், தம் ஆசிரியரைக் கொண்டு பாட்டுகளைத் தழுவி எழுதுவித்த உரைநடையையும் 1897-ல் ஆச்சிட்டார்கள். சுவாமிகள் முன்னுரை எழுதியுள்ளார்கள். ஆசிரியர் சுவாமிநாதையரவர்கள் சாற்றுக் கவிகள் அளித்துள்ளார்கள்.

2. திருப்பாதிரிப்புலியூர்த் தோத்திரக்கொத்து :

ஆலய வழிபாடு கொள்வோர்க்குத் தல மூர்த்திகளின் மேல் பாக்களைப் பாட எளிதாயிருப்பது கருதிப், பல ஆன்றோர் பல பல சமயங்களிற் பாடிய பாக்களையெல்லாம் திரட்டித் 'திருப்பாதிரிப்புலியர்த் தோத்திரக் கொத்து’ எனும் பெயர் சூட்டி அச்சிட்டு 1917-ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது யாவர்க்கும் அன்பளிப்பாக வழங்கச் செய்தார்கள்.

3. அற்புதத் திருவந்தாதி :

காரைக்காலம்மையார் என்று யாவராலும் கூறப்பெற்று வந்த வயது முதிர்ந்த ஓர் அம்மையார் மடாலயத்தில் இருந்தார்கள். அவர்கள் திருவருளிற் கலந்து மோட்ச தீபம் நடைபெற்ற அன்று சிறு வடிவில் அதனை அச்சிடுவித்து யாவர்க்கும் வழங்கச் செய்தார்கள்: