பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

13


அடிகளார் தாம் கொண்ட உறுதியிலிருந்து மாறவேயில்லை என்பதையும் திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

‘ஞானியார் மடத்தலைமையும் சிவிகையூர்தலும் இன்ன பிறவும் சுவாமிகளை வெளியூர் செல்லாதவாறுதகைந்து வந்தன. அவைகள் சுவாமிகளைச் சிறைப்படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன்.

1941 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவிலிருந்து இராமசாமி நாயுடு என்ற அன்பர் சென்னை வந்திருந்தார். ஞானியாரடிகளையும் திரு.வி.க.வையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அவர் பெரிதும் விரும்பினார். அடிகளின் இசைவைப் பெற நாயுடுவும் திரு.வி.க.வும் மடாலயம் சேர்ந்தனர். நாயுடு அடிகளிடம் தம் விருப்பத்தைக் கூறினார். ‘எனக்குள்ள தடைகளை முதலியாரவர்கள் சொல்வார்’ என்ற பதில் சுவாமிகளிடமிருந்து நகைப்புடன் பிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்விரண்டு நிகழ்ச்சிகளுககுமிடையே சுமார் முப்பதாண்டுகள் ஓடியுள்ளன. முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு கால ஓட்டத்தில் அடிகளாரின் மனம் மாறியிருக்கக்கூடும் என்று திரு.வி.க எண்ணியிருக்கலாம். ஆனால் அடிகளாரின் மனஉறுதி சிறிதளவும் தளரவில்லை என்பது நிரூபணம் ஆயிற்று.

தமது வாழ்வின் இறுதிவரை அடிகளார் தம் உறுதிப்பாட்டை பாதுகாத்து வந்தார். இதற்கும் ஒரு நிகழ்வு சான்று ஆகிறது.

திருமதி. பாச்சியம்மையார் என்பவர் இறைபக்தியில் ஆர்வம் மிகக் கொண்டவர். ஞானியாரடிகளிடமும் அவ் அம்மையார் மதிப்பு கொண்டிருந்தார். சுவாமிகளை காசி யாத்திரைக்கு வந்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிவிகையூர்ந்து செல்வது பெரும் துன்பம் தரும்; காலமும் அதிகம் பிடிக்கும்; அதனால் மோட்டார், லாரி அமைத்து, நீராடல் பூசை புரிதல் யாவற்றையும் லாரியில் ஏற்பாடு செய்துவிடுவோம்; காரில் பயணத்தை நிகழ்த்தலாம் என்று அம்மையார் விண்ணப்பித்தார். அதையும் அடிகள் நகை முகத்தோடு மறுத்துவிட்டார்.