பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வல்லிகண்ணன்



சில கட்டுரைகள்

சிவத்திரு ஞானியாரடிகள் ஐந்தாம் குருமூர்த்தமாக எழுந்தருளி அருளாட்சி நடத்தி ஐம்பது ஆண்டுகள் நிறைந்து பொன்விழா நடைபெற்றது. அப்போது பல அன்பர்கள் அடிகளார் அருள்நலம்பற்றிப் போற்றிப் புகழ்ந்தனர். அவருள் சிலர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

1. ஞானியார் மடத்தில் பொன்விழா
(திரு. வி. கலியாணசுந்தர முதலியார்)

நமது நாட்டில் அறப்பள்ளிகள் பல உண்டு. அவைகளுள் ஒன்று திருக்கோவலூரிலிருப்பது. அஃது ஆதி ஞானியாரால் காணப்பெற்றது. அதன் தொடர்பு கொண்ட பள்ளி திருப்பா திரிப்புலியூரில் திகழ்வது.

இப்பொழுது கோவற்பள்ளித் தலைவராக வீற்றிருப்பவர் ஞானியார் சுவாமிகளென்னும் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். சுவாமிகள் அப்பள்ளித் தலைமை ஏற்று அரை நூறாண்டாகிறது. ஆகவே பொன் விழா எங்கணும் பொலிவதாக.

ஞானியார்சுவாமிகளை யான்கால்நூற்றாண்டாக அறிவேன். சுவாமிகள் அடியின்கீழ் நின்று பேசும் பேறும், அவருடன் நெருங்கி உரையாடும் பேறும் எனக்குப் பல முறை வாய்த்ததுண்டு. அடிகளின் ஆசி பெற்றவருள் சிறியேனும் ஒருவன்.

முருகன் சேவடி வருடியுருகும் ஈரநெஞ்சம் அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறுதுதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங் குஞ் செவியும், பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக் கதிர் விரிக்குந் திருமேனியும், 'சண்முகா - சண்முகா' என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திரு வோலக்கப் பொலிவும், என்னுள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையுங் கவரும்; எவர்க்கும். எளிதில் இன்பூட்டும்.

ஞானியார் சுவாமிகளின் புலமை வியக்கத்தக்கது. அவர் தமிழில் பெரும் புலவர்; வடமொழியில் வல்லவர்; ஆங்கிலமும் தெரிந்தவர்; காலக் கலையில் பண்பட்டவர்.