பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வல்லிக்கண்ணன்

யுறுத்தி வந்தார்கள். அதுபற்றி கேட்போர் உள்ளம் உருகும் விதத்தில் அரிய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்கள்.

அடிகளின் சொற்பொழிவால் உளம் நெகிழ்ந்த செல்வர் சிலர், முப்பத்திரண்டு சவரன் பொன்னிடப் பெற்ற உருத்திராக்கத் தாழ்வடம் ஒன்றை அவர்களுக்கு அணிவித்து நன்றி கூறினர். பின்னர் ஒரு சமயம், மாணவர் கழகச் சிறப்பு விழாக் கூட்டத்தில் சிறந்த சொற் பொழிவாற்றிய தலைமை மாணாக்கர்க்கு, அடிகளாரின் ஆசியுடன், அந்தப் பொற்கவசமிட்ட உருத்திராக்க மாலை அணிவிக்கப் பெற்றது. அடிகள் தம் மாணவரின் பேச்சுத் திறனைப் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

தமிழ் மொழிப்பற்றும், சமயப் பற்றும் கொண்டு வாழும் அன்பர்களிடம்-அவர்கள் யாராயினும், எம்மதத்தைச் சார்ந்த வராக இருந்தாலும்-அடிகள் அன்பும் பரிவும் காட்டத் தயங்கியதேயில்லை. அதற்காக எழுந்த பிறரது கண்டனக் கணைகளை மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொண்டார்.

அவர்களது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

புதுவையில் சின்னையா ஞானப்பிரகாச முதலியார் என்பவர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயினும் மதவேறுபாடு இல்லாதவர். பிற மதங்களை வெறுக்காதவர். வடலூர் இராமலிங்க வள்ளலார் அருட்பாக்களில் ஈடுபாடு கொண்டவர் அவர். சைவ சமயத்திலுள்ள கொள்கைகள் பலவற்றை ஆதரிப்பவர். அவரது தன்மைகளை ஞானியாரடிகள் அறிந்திருந்தார்கள்.

அடிகள் புதுவை கலைமகள் கழகத்தினர் அழைப்பை ஏற்று அங்கு சென்ற போது, ஞானப்பிரகாச முதலியார் விரும்பி அழைத்ததனால், ‘மங்களவாசம்’ எனும் அவர் மாளிகைக்குச் சென்றார்கள். முதலியார் அன்போடும் பரிவோடும் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, சீதா கல்யாணம் என்ற சிறப்பான சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள்.

அக்காலத்தில், சென்னை சைவசித்தாந்த மகாசமாஜத்தின் தலைவராக அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் இருந்தார். ஞானியாரடிகள் கிருஸ்தவர் இருப்பிடம் சென்ற நிகழ்ச்சியைக் கண்டித்து, அவர் சமாஜத் தலைவர் பதவியை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.