பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

17


இச்செய்தியை மாணவர்கள் மூலம் அறிந்த அடிகள் அவருக்காக அனுதாபப்பட்டார்கள். ‘என்னே அறியாமை பிற மதத்தை இகழாமலும், தம் மதத்தில் திண்மையான பறறும கொண்டிருப்பதன்றோ ஒவ்வொருவர் கடமையும் ஆகும்’ என்று கூறினார்கள். அதற்கு ஆதாரமாகசாக்கிய நாயனார் புராணத்தில் வருகிற

‘எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் மன்னிய சீர்ச்சங்கரன்தாள் மறவாமை பொருளன்றே’

என்ற பகுதியை எடுத்துக்காட்டினார்கள்.

இந்நிகழ்ச்சி அடிகளாரின் பரந்த நோக்கையும், மத நல்லிணக்கத்தையும் புலப்படுத்துவாய் அமைந்துள்ளது.

ஞானியாரடிகளிடம் பாடம் கற்று அறிவொளி பெற்றவர்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள். அடிகள் எந்த ஊருக்குச் சென்றாலும் தமிழ்ப்பணியை தொடர்ந்து செய்து வந்தார்கள். அவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், புத்தகம் முதலியவற்றைப் பாராமலேயே பிறரது ஐயங்களைப் போக்கித் தெளிவுபடுத்தும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்த நூலிலும் ஐயம் என எவர் வந்தாலும் தயங்காது அவ்வையங்களை அகற்றியருள்தல் அடிகளிடம் மட்டுமே காணப்பெற்ற ஒரு தனிச்சிறப்பாகும் என அடிகளை அறிந்தவர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

அடிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், பலப்பல ஊர்களுக்கும் சென்று சைவம் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி அருட்பணிபுரிந்தார்கள். அவர்களது பேச்சின் சிறப்பு பற்றி திரு.வி.க. தமக்கே உரிய முறையில் அழகாகப் பாராட்டியுள்ளார்.

‘அறிவு மழை நீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங்கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பல திறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கிலெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத்தன்தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலெழும் மின் விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது’.