பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வல்லிக்கண்ணன்


பலரும் போற்றி மகிழத்தக்க நற்பண்புகள் பலவற்றையும் ஞானியாரடிகள் பெற்றிருந்தார்கள்.

மடாலய மரியாதைகள் பல உண்டு. பல்லக்கு, மேனா, குடை, கொடி, சாமரை, தீவர்த்தி முதலியவை மடாலயத்தின் முந்தைய குருமார்களால் கைக்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் ஞானியாரடிகள் அவை ஆடம்பரமானவை எனக்கருதி அவற்றை நிறுத்தி விட்டார்கள். திருச்சின்னம் பயன்படுத்துவதைக் கூட, தென்னாட்டு யாத்திரைக்குப் பிறகு விட்டு விட்டார்கள். எனினும், உறுதிமொழி ஏற்றிருந்தனால் சிவிகை ஊர்தலை மட்டும் அவர்கள் இறுதிவரைகடைப்பிடித்தார்கள். விஜயதசமி அன்றும், மாட்டுப் பொங்கல் நாளிலும் திருக்கோயில் இறைவன் சப்பரத்தில் எழுந்தருள்வது வழக்கம். மடாலய முகப்பில் வரும்போது அடிகள் இறைவனைத் தரிசிப்பார்கள். அடுத்து, மடாலயத்தின் முதலாவது குருமூர்த்தி அணிந்து வந்த தலைமாலை, மார்பு மாலை முதலிய கோவைகளை அணிந்து பூசை புரிந்து விட்டுக் கொலுவிருப்பார்கள். வணங்கும் பக்தர்களுக்குத் திருநீறு அளித்த பிறகு அவைகளை நீக்கிவிட்டு எப்போதும் போலவே இருப்பார்கள்.

விலை உயர்ந்த மதிப்புமிகுந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவதில் ஞானியாரடிகள் ஒருபோதும் விருப்பம் கொண்டதில்லை. தரிசிக்க வரும் அன்பர்கள் கொண்டு தரும் பழங்கள் முதலிய பொருள்களை அங்கே உள்ள அனைவருக்கும் வழங்கிவிடுவார்கள். கொண்டு வந்த அன்பர்களுக்கும் பிரசாதமாகச் சில அளிக்கப்படும்.

அனைவரும் தமிழ் மொழியைத் திருத்தமாகப் பேச வேண்டும் என்பதில் அடிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். அவர்களும் தம் பேச்சில் கொச்சைச் சொல் எதையும் பயன் படுத்தமாட்டார்கள். மடாலயத்தில் பழகுவோர், மாணவர் முதலியோர் யாவரும் அவ்வண்ணமே திருத்தமுறப் பேசுவதில் கருத்தாக இருந்தார்கள்.

ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்வதில் கூடியவரை அதிகமான பொருள்களைப் பயன்படுத்துவது அடிகளின் இயல்பாக இருந்தது. சிறப்பு நாட்களில் அவ்விதம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

எதையும் கணக்குப் பார்த்தே செலவிடுவது அவர்கள், வழக்கம். வீண்செலவுகள், ஆடம்பரங்களை அடிகள் வெறுத்தார்கள்.