பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிவத்திரு. ஞானியாரடிகள் பெருந்தவயோகி !
பேராசிரியர் டாக்டர் K.A. மணவாளன் M.A., M.C., Ph.d.
(Vidwan Siromani B.O.L. Dip.in Hindu Religion)
Retd. Tamil Professor D.G. Vaishnav College Chennai-106,

உலக வாழ்க்கை இன்ப துன்பங்கள் நிறைந்தது. மேடு பள்ளங்கள் கொண்டது. இருளும் ஒளியும் சூழந்தது. கடலும் காடும், மலையும், மண்ணும், விண்ணும் கொண்ட இப்பரந்த உலகில் வாழப் பிறந்தவன் மனிதன். அவன் இன்பமாக, உண்மையாக வாழ விரும்புகிறான். ஆனால் அவனை அவ்வழிகளில் வாழவிடாமல் அவனைத்தடுப்பது அறியாமை என்னும் பேரிருள்தான். அவ்விருளின் நீங்கி அவன் ஒளிபெற்று வாழ ஒளிவிளக்கு வேண்டும். அந்த ஒளிவிளக்கை ஞான விளக்கு என்றார்கள் ஞானிகள். அத்தகு ஞானிகளில் ஒருவராய் ஒப்பற்றவராய் விளங்கியவர் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப் புலியூர் மடாதிபதியாக விளங்கிய, ஞானியார் சுவாமிகள் என்றே பெயர் பெற்ற ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்; இவரைத் தமிழ்நாட்டினர் ஞானியார் அடிகள் என்றே கூறுவர்.

வாழ்க்கைக் காட்டில் இன்ப வெளியை நாடிப் பயணம் செல்லும் மனிதனுக்கு இடையூறுகள் பல உண்டு. சிற்றறிவு உடையவன் தானே மனிதன். இருளையும் துன்பத்தையும் தாண்டும் போது அவன் மனம் உறுதி தளர்கிறது. அப்போது அறிவிலார் பலர் சூழ்ந்து அவனை மயக்கி வேறுவழியில் செலுத்திவிடுகிறார்கள். அப்போது அம்மனிதனுக்கு உற்றதுணை ஒன்று வேண்டுமல்லவா?

குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இருள்தான் ஒளிக்கு வழி காட்டுமா? தடுமாறுகிறவன் தெளிவுக்குத் துணை செய்வானா? முடியாது. தெளிவான ஞானமுடைய ஒருவனே - தெளிந்தவனே - உறுதியுடையவனே உறுதுணையாக முடியும். அத்தகைய தெளிந்த ஞானமுடையவர்களே சமயாசாரியர்கள். அவர்களே உண்மையான வழிகாட்டிகள். ஆன்ம நேய அன்பு ஒற்றுமைக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் இத்தகு சமயாசாரியர்கள் காட்டிய நெறிமுறைகளும் உபதேசங்களுமே முக்கிய காரணங்களாகும்.