பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

35

பாடம் சொல்லித்தரும் அளவுக்கு பெரும் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது அவரது பெருமைமிக்க வரலாறு :

ஞானியாரடிகளோ - இதிலேயும் வித்தியாசமானவர். பகல் பொழுதுகளில் - உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், புலவருக்குப் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மடத்தில் வைத்துப் பாடம் சொல்லித் தருவதை ஒரு அன்றாட பணியாகவே கருதி செயல்பட்டு வந்தார் அவர்

இன்றும் கூட இந்துமதத் துறவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பல மடாதிபதிகள் - முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் மீது துவேஷம் கொண்டவர்களாகவும், இந்து சமயத்தினரைப் பிற மதத்தினர் மீது துவேஷம் கொள்ளத்தூண்டுபவர்களாகவும் செயல்படுவதைக் காண்கிறோம்!

ஞானியாரடிகளுக்கு இத்தகைய சமயம் சார்ந்த காழ்ப்புணர்ச்சிகள் எதுவும் எள் முனையளவு கூட இருந்ததில்லை.

ஞானியாரடிகளிடம் பாடம் கேட்டுப் பயின்ற எத்தனை எத்தனையோ மாணவர்களில் ஒருவரான ஆராய்ச்சி அறிஞர், முனைவர் சுந்தர சண்முகனார். ஞானியாரடிகளின் வாழ்க்கை வரலாற்றினை மிகச் சிறந்ததோர் நூலாக எழுதியிருக்கிறார்! அதிலே ஒரு நிகழ்ச்சி; அது சைவ சமயம் தழைக்கப் பாடுபட்ட ஞானியாரடிகள், தமிழ் வளர்ப்பது என்று வந்தால், எந்தச் சமயத்தினரானாலும் அவர்கள் தமிழறிந்தவர்களாக - தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினார் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

“கடலூரில் இருந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் (S.S.I.C.) தமிழ் தவிர்த்த மற்ற பாடங்களில் நிரம்ப மதிப்பெண் பெற்றும் தமிழ்ப் பாடத்தில் பதினாறு மதிப்பெண் மட்டுமே பெற்றதால் தோல்வியடைந்துவிட்டான். அவன், தனக்குத் தெரிந்த திருஞான சம்பந்தம் பிள்ளை என்பவரிடம் போய் தனக்குத் தமிழ்ப்பாடம் (Private-Tution) கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டினான். அவர் ஞானியாரடிகளின் கல்விச் சிறப்பை விளக்கி, அவரிடம் சென்றால், உனக்குத் தமிழ் கற்பிப்பார் என்று கூறி அவனை அடிகளாரிடம்அனுப்பி வைத்தார்.

அவன் ஒருநாள், புலிசை (திருப்பாதிரிப்புலியூர்) அடிகளாரின் அருளகத்துக்குச் சென்றான். அங்கே முன் கட்டில் ஒரு சாமியார், எளிய உடையுடன் எளிமையாய்க் காணப்பட்டார்.