பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வல்லிக்கண்ணன்

அதற்கு அடிகளார்,

“நான் இத்தனையாண்டு காலம் மேனா என வழங்கப் பெறும் சிவிகையிலேயே சென்று வந்தேன். இது எங்கள் ஆதீனத்தின் மரபு. இப்போது போய் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தினால் இவ்வளவு நாளாய்க் காத்துவந்த மரபுப் பெருமை கெட்டுவிடும். மற்றும் யான்சிவிகையில் செல்வதால், வழியில் உள்ள சிற்றூர்களையெல்லாம் பார்க்கவும், அங்கங்கே தங்கிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் - அவ்வூர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடிகிறதன்றோ?”

என்று பதிலளித்தார்; திரு.வி.க. அதனையேற்றார்!

மோட்டார் காரில் வர மறுத்தார்; சிவிகையிலேயே பயணம் செய்வேன் என்பது மட்டுமல்ல ஞானியாரடிகளின் சிறப்பு!

தந்தை பெரியார் போலவே இவரும் தாம் ஏற்றுக் கொண்ட சைவமும் - தமிழும் பரப்பும் கொள்கைக்காக இறுதி மூச்சடங்கும் வரையில் பயணித்துக் கொண்டே இருந்தார். 1941இல் அவர் இயற்கை எய்துவதற்கு முன்புகூட திருவண்ணாமலையில் தொடங்கி திருக்கோவலூர், பெண்ணாடகம் போன்ற பல ஊர்களில் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திருச்சியில் மூன்று நாட்கள் நடந்த சைவ சித்தாந்த மகா சமாசத்தினரின் மாநாட்டில் தலைமையேற்று உரைநிகழ்த்தினார். அங்கிருந்து மணப்பாறை வழியாக பழநி சென்றார். அங்கேயும் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார். அங்கிருந்து திருச்சி புறப்பட்டார். ஒரு திருமண விழாவுக்கு முன்னிலையேற்க! பழனியிலிருந்து திருச்சி செல்லும் வழியில் ஆய்குடி அருகே சிந்தலவாடன்பட்டி என்ற ஊரில் அவருக்கு உடல்நிலை சீர்கெட்டது. அப்போதே அவர் தமிழன்னையையும் - தமிழ் அன்பர்களையும், சமய நம்பிக்கை கொண்டவர்களையும் கண் கலங்க வைத்துவிட்டு தமது வாழ்க்கைப் பயணத்தை - வழி நடைப் பயணத்திலேயே முடித்துக் கொண்டவர்போல் இயற்கை எய்திவிட்டார். இந்த விஷயத்தில் பெரியாரும் இப்படித்தான் என்பதாலோ என்னவோ

காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் அவர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காக