பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஞானியாரடிகளின் வாழ்வும் - பணியும் !
க. திருநாவுக்கரசு

திருப்பாதிரிப்புலியூர் மடத்தின் அயந்தாம் பட்டமாகிய சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் தாம் இம்மடத்துக்கு புகழைச்சேர்த்தவராவார். இவரை அனைவரும் ஞானியார்சுவாமிகள் என்றும் ஞானியாரடிகள் என்றும் கூறுவர். இவரது குரல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகள் வரையிலும் தமிழகமெங்கும் ஒலித்தது.

ஞானியாரடிகள் 1873 ஆம் ஆண்டுப் பிறந்து, தமது 69ஆவது அகவையில் 1942இல் இயற்கை எய்தினார். இவரை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இவரது பேச்சையும் கேட்டிருக்கவும் முடியாது. ஆனால் இவரைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகளின் வழியாகத்தான் முதன்முதலில் 1959ஆம் ஆண்டுக் கேட்டேன். நான் அவரது சொற்பொழிவைக் கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அவரைப்பற்றி கூறாமல் இருக்கமாட்டார். அடுத்து நான் ஞானியாரடிகளைப் பற்றி திரு.வி.கவின் வாழ்க்கைக் குறிப்புகளிலும் மறை. திருநாவுக்கரசு எழுதிய மறைமலையடிகள் வாழ்க்கை வரலாறு எனும் புத்தகத்திலும் படித்து அறிந்தேன்.

சாமி சிதம்பரனாரின் தமிழர் தலைவர் புத்தகத்தில் பெரியாரின் குடிஅரசு அலுவலகத்தைத் தொடங்கி வைத்தார் ஞானியாரடிகள் என்பதைப் படித்துத் தெரிந்து கொண்டேன். திருச்சி குழித்தலை கடம்பர் கோவிலில் இளமுருகு பொற் செல்வி அவர்களின் இல்லத்தில் தங்கி அவர்களின் நூலகத்தை ஒரு பார்வை பார்த்தபோது 1910க்குப் பிறகு 1940 வரையுள்ள நூல்கள் மற்றும் சமய, அரசியல் இதழ்களில் ஆங்காங்கே ஞானியாரடிகளின் பெயர்கள் கண்களில் அகப்பட்டவாறே இருந்தன.

சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடான செந்தமிழ்ச் செல்வியில் ஞானியாரடிகளின் ஒளிப்படத்தோடு அவரைப் பற்றிய செய்திகளையும் படித்தேன்.

1970ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் திரைப்பட உரையாடல் ஆசிரியராகத் திகழ்ந்த வி. என். சம்பந்தத்தைச் சந்திக்க நேர்ந்தது.